வெள்ளி, 4 மார்ச், 2022

கணாபத்திய ஞானம்

 கணாபத்திய ஞானம்



கணபதி யார்? 

கணபதி சுழுமுனை நாடியை குறிப்பவர். "சுருண்ட முனை" என்பது சுழுமுனை ஆச்சு. அதாவது சுருண்ட தும்பிக்கையை இது குறிக்கிறது. தும்பிக்கை இடப்பக்கமாகவோ அல்லது வலப்பக்கமாகவோ அசையலாம். கணபதி என்ற சுழுமுனை நாடி,  தும்பிக்கை போன்று நீண்டு உயிர் என்ற வாலை சக்தியோடு ( பராசக்தி ) பொருத்தி இணைக்கும் யோக நுணுக்கமே கணாபத்யம் எனப்படும்.
ஆன்மா (சிவன்) தனக்குக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உயிருக்கு (சக்தி) அனுப்பி விடும். உயிர் அதை காந்த ஆற்றலா அல்லது வெப்ப ஆற்றலா என்பதைப் பிரித்து உணர்ந்தபின்,  சுழுமுனை நாடிக்கு கொடுத்துவிடும். சுழுமுனை நாடி, தனக்கு வரும் ஆற்றல் காந்த ஆற்றல் எனில் வலது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும், அதுவே வெப்ப ஆற்றல் எனில் இடது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும். சுழுமுனை நாடி இவ்வாறு பகுத்து உணர்ந்த ஆற்றலை தலைமை சுரபிக்கு அனுப்பி விடும். தலைமை சுரபி அந்த ஆற்றலை மற்ற சுரப்பிகளுக்கு அனுப்பி விடும்.




உச்சிஷ்ட கணபதி :-

இது குறைந்தது 12 ஆண்டுகள் யோக ஞான மார்க்கத்தில் உள்ளோர்க்கு மட்டும். மற்றோரும் அறிந்துகொண்டால் சிறப்பு. நம் கோவில் சிற்பங்களின் ஞானத்தை அறிவார்கள். ஒரு நாளின் இறுதி நாழிகை அதாவது அறுபதாம் நாழிகை அல்லது பிரம்ம முகூர்த்தத்திற்கு முந்தைய நாழிகையில் பராசக்தி என்ற உயிர் எந்த ஆற்றலும் இல்லாமல் நிர்மல தன்மையோடு இருக்கும். இதையே நிர்மலா தேவி என்று சித்தர்கள் அழைப்பார்கள். அவளின் நீல நிறம் நிர்மல தன்மையையும், இருளும் வெளிச்சமும் சந்திக்கும் நேரத்தையும் குறிக்கிறது.




இந்த அபூர்வமான நேரத்தில் கணபதி என்ற சுழுமுனையை நிர்மலா தேவியாக இருக்கும் நாதத்தோடு பொருத்தி இருப்பதே உச்சிஷ்ட கணபதி என்று பொருள்படும்.






சமஸ்கிருதத்தில் உச்சிஷ்டம் என்றால் எச்சில் படுத்துதல் என்று பொருள். யோகிக்கு எச்சில் படும் இடம் வாயின் மேல் அன்னமும் நாவுமே. அதாவது இது கேசரி யோக நுணுக்கத்தில் ஒரு பரிபாஷையாகும். இவ்வாறு யோகி செய்யும் புறச் செயல் சிரசுக்குள்ளே சுழுமுனை நாடியை நீட்டி உயிரோடு தொடர்பு கொள்ளச் செய்யும்.



கீழே உள்ள படத்தில் ஒரு யானை, மரத்தில் தொங்கும் பழம் பறிக்க விரும்பும் பொழுது, அதன் தும்பிக்கையை நேராக மேல்நோக்கி நீட்டி இருப்பதை பாருங்கள். இது இடப்பக்கமும் இல்லை வலப்பக்கமும் இல்லை நேராக நீட்டி இருக்கிறது. 




  இதன் பொருள் சுழுமுனை நாடியை நேராக நீட்டி நாதம் எனும் நம் உயிரோடு யோகப் பிணைப்பு கொள்வது. இதுவே உச்சிஷ்ட யோக நுணுக்கமாகும்.










இது கேசரி யோகத்தின் ஒரு சிறப்பு நுணுக்கம். அகம் மற்றும் புறம் நுணுக்கத்தின் மூலம் நாதத்தோடு இணைதல். இந்த உச்சிஷ்ட கணபதி யோக நுணுக்கம், யோகிக்கு அரிய பல சித்திகளை தரவல்லது. ஆனால் யோகியானவர் குறைந்தது 12 ஆண்டுகள் இறைவனோடு சேர வேண்டும் என்ற வேண்டுதலோடு யோகத்தில் இருந்திருக்க வேண்டும்.

Secret yogic technique of connecting the sulumunai naadi with the empty soul particle ( naatham ).


ஞானப்பழத்தை பெற்றது எப்படி?
கணபதி என்ற சுழுமுனை நாடி,  தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, தான் சாதிக்க விரும்புவதை சாதித்து விடுவார். தேவையான அளவுக்கு நீட்டிக் கொள்ளும் தும்பிக்கையின் மூலம் தாய் தந்தையரை சுழற்றி வந்து, உலகத்தையே சுற்றி வந்ததாக சொல்லி, ஞானப்பழத்தைப் பெற்றுக் கொள்வார்.  விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   விநாயகர் ஔவைக் கிழவியை தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து, தும்பிக்கையை நீட்டிக்கொண்டே போய், கைலாசத்தில் ஔவையாரைச் சேர்த்தாராம். இது எப்படி என்று இப்போது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.



நடன கணபதி நுணுக்கம் :-
கீழே, தும்பிக்கை நுனியில் சங்குடன் நடன கணபதி, மிகுந்த அபூர்வமான யோக நுணுக்கம் கொண்டது. இடதுகாலை ( இடகலையை ) சிறிது உயர்த்தி தும்பிக்கை நுனியில் சங்கை காட்டுவது, யோகிக்கு கிடைக்கும் நாத ஓசையைக் குறிக்கிறது.



வள்ளி திருமணத்தில் கணபதியின் உதவி :-
 ஆறுமுகன் என்பது தலைமைச் சுரபியை குறிப்பவர். தலைமைச் சுரபியான முருகனால் உடலில் ( உலகில் ) உள்ள அனைத்து சுரப்பிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும், சூட்சுமமாக சுற்றிவர முடியும். ஆனால் அவரால் வாலை எனும் வள்ளியை நெருங்க முடியாது, அதற்கு சுழுமுனை நாடி என்னும் விநாயகரின் துணை தேவை.



 
நன்றி :-

ஒற்றை அணு (வாலை),  சுழுமுனை நாடி மற்றும் பிரம்மமுகூர்த்த நாழிகை பற்றிய அரிய குறிப்புகளை குருநாதர் அருளால், பாண்டிச்சேரி ஞானாலயம் நூல்களின் மூலம் நான் அறிந்துகொண்டேன்.






இப்படிக்கு அன்புடன்,

அகத்திய பக்தன்.


கருத்துகள் இல்லை: