சனி, 1 ஜூன், 2019

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 4

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 4

*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.




எண்ணிற்கேற்றபடி பெயரின் எழுத்துக்களை மாற்றும்போது, இனிஷியலையும் சேர்த்து கணக்கில் எடுக்கவேண்டும். உதாரணமாக, இனிஷியல் மற்றும் பெயர் எழுத்துக்கள் சேர்ந்து நாற்பத்தியாறு வந்தாலே சரிதான். அதோடு, பெயர்மட்டும் தனியாகவும் அதிஷ்டமான எண்ணில் அமைந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் அப்படி அமைப்பது சிறிது சவாலானது. நீங்கள் உங்கள் பெயர் எண்ணை, ஓரளவிற்கு அர்த்தம் மற்றும் ஓசை மாறாமல் பெயர் எழுத்துக்களை மாற்றியபின், ஒரே ஒரு எண் குறைபாட்டில் சவாலாக நிற்கும். அந்த சூழ்நிலையில் பொதுவாக "அம்பாளுக்கு உரியதும் அகரமுமான" “A” என்ற எழுத்தை இனிஷியல் முன் சேர்த்துக்கொள்வார்கள். யாரேனும் ஏன் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் என்று கேட்டால், உங்கள் குலதெய்வம் "அம்மன்", அதனால் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் காரணம் சொல்லலாம்.


எனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை சிறிதே மாற்றி 41 எண்ணில் அமைத்தபின், எனது தாத்தாவின் பெயர் "சின்ன ராமசாமி" என்பதில் "C" எழுத்தை எடுத்துக்கொண்டேன். முடிவாக C.R.Prammendran ( 5+41=46 ) என்று சரியாக அமைந்தது. இந்த அதிஷ்டபெயரை எழுத ஆரம்பிப்பதற்கான கோடில்லாத நோட்டுகள் வாங்கி, அதில் சரியான இடைவெளியில் ஒருநாளைக்கு நாற்பத்தியாறு கோடுகள் வீதம், நாற்பத்தியாறு நாளைக்கு கோடுகள் கிழித்து, பெயர் எண்ணிற்க்கான அதிஷ்டதேதியில் ப்ரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வழிபட்டு எழுத ஆரம்பித்தேன்.



இடைவெளியில்லாமல் தொடர்ந்து நாற்பத்தியாறு நாளைக்கு, தினமும் எழுதியபின் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று மனமுருக பிராத்தனைசெய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன். வாரம் ஒருமுறை விடுமுறையில் ஒரு பெரியகோவிலுக்கு ( பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் ) சென்றுவிட்டு, என் அதிஷ்ட பெயரில் என்னால் இயன்ற தொகையை ஆதரவில்லாதோர்கள் ஆஷ்ரமத்திற்கு தர்மம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன். (எழுதிய நோட்டின் புகைப்படம் கீழே உள்ளது)



இறைவன் அருளால் வெற்றிகரமான நாற்பத்தியாறு நாட்களுக்குப்பின், பெங்களூரின் பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்தில் மாதம் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பதவி உயர்வுடன் குறைந்தது இருபத்தி ஐந்து சதவிகிதம் சம்பள உயர்வும் இறைவன் அருளால் கிடைத்தது. குடும்பத்தோடு வீட்டை ஓசூரில் அமைத்துக்கொண்டு, தினமும் பெங்களூர் வேலைக்கு சென்றுவந்தேன்.  அருளான இரண்டு பெண் குழந்தைகள். எம்பெருமான் நாராயணன் கருணையோடு மண், பொன் மற்றும் பெண் என்று மகத்தான மூன்று செல்வத்தையும் அருளினார். ( இதை படிக்கும்போது, நானே உங்கள் பெயரை மாற்ற உதவவேண்டும், அல்லது யாரேனும் உதவுவார்களா ? என உங்களுக்கு கேட்க தோன்றும். நான் யாருக்கும் இந்த வகையில் உதவுவதில்லை. இறைவன் அருளை நீங்கள் மனமுருகி பணிந்து பெற்றுவிட்டால், நீங்கள் யாரைத் தேடியும் போய் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. இறைவன் அருளால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி உங்களை தேடி வரும். இப்படியெல்லாம் நடக்குமா? என்ற சந்தேகம் வேண்டாம். அடியேன் என் வாழ்வே சாட்சி. மேலும் நவீன எண்ணியல் பற்றி நீங்களே படித்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள, நான் முன் பகுதியில் குறிப்பிட்ட "அதிஷ்ட விஞ்ஞானம்" என்ற நூலை வாங்கி படியுங்கள். http://scienceoffortune.com/numerology/
அடியேன் நான் என் அனுபவித்தை சொல்லும்போது, உங்களில் பெருன்பாலானவர்க்கு, நான் ஏதோ அனைத்தையும் திறமையாக திட்டமிட்டு பெற்றதாக தோன்றும், அல்லது அனைத்தும் கட்டுக்கதை என்றே தோன்றும். கடினமாக உழைத்தேன்... படித்தேன்.. உண்மைதான். ஆனால் இறைவன் அருள் கிடைத்த பின்பே சரியான பலன் சரியான வழியில் கிடைத்தது.


 எல்லாம் சரிதான், ஆனால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையும் உண்டு என்பதை சில வருடங்கள் கழித்தே நான் உணர்ந்தேன். மேலும், அடுத்த தொடரில் இறைவன் அருளால் கிடைத்த ராசிக்கல் மோதிரம் பற்றி சொல்கிறேன். என்னடா இவன் ஜோதிடம் மோதிரம் என்று ஏதோ சொல்கிறானே, என்று நினைப்போர், தொடரின் முதல் பகுதியின் முதல் பத்தியை மீண்டும் படித்து இறைவனின் கருத்தை எடுத்துக்கொள்ளவும்.  எந்த சாஸ்திரமும் மனமுருகிய தெய்வ வழிபாட்டிற்க்கு ஈடாகாது.



தொடரும்...


இப்படிக்கு,
அகத்திய பக்தன

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 3

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 3

*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.




அடுத்ததாக எந்தப் பெண்ணை முதலில் பார்ப்பது? என யோசித்தோம். உடனே அடியேன் மனதிற்குள் வேகமாய் ஒரு கணக்குப் போட்டேன். தொலைதூரம் என்றால் பேரூந்துக் கட்டணம் அதிகமாய் இருக்கும் என்பதை யோசித்து, அதை வெளியே சொல்லாமல், "அருகில் உள்ள ஊர் பெண்ணை முதலில் பார்த்து அதுவே அமைந்துவிட்டால் தொலைதூர அலைச்சல் வேண்டாமே.." என்றேன். ஆனால் மாசிலா பெரியம்மா அந்தத் திட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டார். "முதலில் தொலைதூர இராம்நாடு பெண்ணை பார்த்தபின் மற்ற பெண்களைப் பார்த்தால், எளிதாக ஒப்பீடு செய்து தேர்ந்தெடுக்கலாம்" என்றார். இறைவன் விளையாட களமிறங்கிவிட்டார் என்பது புரியாமல் நானும் "சரி. அப்படியே செய்யலாம்" என்று ராம்நாடு கிளம்பினோம்.  மதுரையை தாண்டிப்போகாத நான் முதன்முதலாக ராம்நாடு வந்து பெண் பார்த்தோம். அப்போது பெண்ணின் தாயார், மிகவும் தயங்கி பெண்ணின் கையை எடுத்து காண்பித்து, "பெண்ணின் மணிக்கட்டில் ஒரு சிறு குறை உள்ளது" என்றார். அங்கே ஒரு சிறு நிசப்தம் நிலவியது. ஆனால் அடியேன் என் மனதில் மட்டும் ஆகாவென்று பட்டாம்பூச்சி பறந்தது. "என் மகனே! உனக்காக குறிப்புகளை காட்டிவிட்டோம். இனி சமர்த்தாகப் பிடித்துக்கொள்ளடா" என்று இறைவன் உணர்த்தினார். இன்று வரை அன்னவள், அடியேன் நான் தான் பெரிய தியாகி மிகவும் உயர்ந்தவன்... என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அனைத்தும் "இறைவன் கணக்கின் அடையாளம்" என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.



நான் “இந்தப் பெண்ணே சம்மதம்” என்றவுடன், பெண்வீட்டார் உடனே மறுநாளே திண்டுக்கல் வந்து பார்க்கிறோம் என்றார்கள். பிறகென்ன? மற்ற இரண்டு பெண்களை பார்ப்பதை கைவிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மாப்பிள்ளை தனியார் கம்பெனியில் மிக மிகக் குறைந்த சம்பளம் வாங்குகிறார், மேலும் தொலைதூரத்தில் இருப்பதால் குடும்ப பின்னணியும் முழுதாக தெரியாது, போக்குவரத்தும் கடினம்.. என்ற காரணங்களால் பெண்ணின் உறவுக்காரர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாமே! என வாதித்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் தாயார் "முருகப்பெருமான் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும், பெண்ணின் சகோதரர் "நாராயண பெருமாள் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும் சேர்ந்து ஒரு மனதாக உறுதியாக நின்றுவிட்டார்கள்.  ஹ்ம்ம்... இந்த முருகப்பெருமானும் எம்பெருமான் நாராயணனும் எங்கிருந்து எங்கு வந்து எனக்காக அடித்து விளையாடுகிறார்கள் என்று பாருங்கள். ஓம் நமோ நாராயணாய. ஓம் முருகா போற்றி.



ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனபின், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரும், என் உடன் பணிபுரியும் ஒருவரும் தானாகவே முன்வந்து குறைந்த வட்டிக்கு கடனாக திருமண செலவிற்கு பணம் தந்தார்கள். திருமண நாள் நெருங்க நெருங்க, எந்த நேரத்திலும் எதிர்பாராமல் திருமணம் நின்றுவிடலாம் என்ற பயம் எனக்கு கூடிக்கொண்டே இருந்தது. காரணம், என் தந்தையார் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தைவிட்டு பிரிந்து கோவையில் கர்மவினையால், எங்கு எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. எப்போதும் மது மயக்கத்தில் இருப்பவரை, நெடுந்தொலைவு திருமணத்திற்கு யாரால் எப்படி கூட்டி வரமுடியும்? தாலிகட்டும்வரை யார் அவரை சமாளிப்பது? என்பது பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அனைத்து உறவுகளும் பக்கபலமாக இருந்தார்கள். இறைவன் அருளால் அவரும் வந்துவிட்டார். எப்படியோ திருமணம் நடந்தால் சரிதான், என்று நினைத்த எனக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மகாராஜா தலைமையில் ஜாம்ஜாம் தடபுடலாக திருமணம் நடந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. அன்னவளின் கழுத்தில் தாலியை கட்டிய மறுநிமிடம் தான் அடியேன் என் முதுகுத்தண்டை நிமிர்த்தி "அப்பாடி, இறைவன் நடத்தி விட்டாரடா" என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

            திருமணம் நல்லபடியாக இறையருளால் நடந்தது. இனி வசந்த காலம்தான் என்று பெரிதாக மகிழ முடியவில்லை. ஏனெனில், திருமண கடனுக்கான வட்டி போக மீத சொற்ப வருமானத்தில் எப்படி குடும்ப செலவுகளை பார்ப்பது என்ற கவலை சிறுது எட்டிப் பார்த்தது. திருமணமான நாளிலிருந்து சரியாக தொண்ணூறு நாட்களில் கோவையிலுள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிடித்தம் போக மாதம் ரூபாய் 6500, அதுவும் மென்பொருளின் நவீன தொழில்நுட்பத்தில். சில போராட்டங்களுக்குப் பின், பழைய நிறுவனத்திலிருந்து இறையருளால் கோவையிலுள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். வீடு வாடகை மற்றும் குடும்ப செலவிற்கு (நான், அம்மா மற்றும் மனைவி) இந்த புதிய சம்பளம் அன்றைய 2004 கால கட்டத்தில் மிகச்சரியாக இருந்தது. சிக்கனமாகத்தான் வாழவேண்டும் என்ற கட்டாயம். பழைய நிறுவனத்தின் Provident Fund பணத்தை வைத்து திருமணக் கடனை அடைந்துவிட்டேன். நவீன தொழில்நுட்பத்தில் புதிய வேலை ஆர்வமாக சென்றது. இந்நிலையில் சிலமாதங்களில் அன்னவள் கருத்தரிக்கும் போதுதான் அடுத்தகட்ட வாழ்க்கைக்கான பணத் தேவைக்கு என்ன செய்வது என்ற கவலை வந்தது. அடிக்கடி மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்கும் மருந்து செலவிற்கும் மிகவும் சிரமமாக இருந்தது.  சத்து மாத்திரை வாங்கவே சிரமப்பட்டேன். மருத்துவர் முக்கிய பரிசோதனையை தம்பதியர்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லியும், அதற்க்கு செலவாகுமே, என்று கடைசி வரை எடுக்கவில்லை. வழக்கம்போல் எம்பெருமான் நாராயணனிடம் மனமுருகி பிராத்தனை செய்தோம் ( இந்த முறையிலிருந்து பிராத்தனை செய்ய அடியேனுக்கு இன்னும் இரண்டு கரங்கள் கிடைத்துவிட்டது ( மனைவியின் கரங்களையும் சேர்த்து )  .  இப்படித்தான் நம் கடவுள்களுக்கு பெரும்பாலும் நான்கு கரங்கள் போலும்).


            ராம்நாட்டில் குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது. உடனே பணிவிடுப்பு எடுத்து ராம்நாட்டிற்கு வந்துவிட்டேன். உறவுகளின் வாழ்த்துக்கள் ஒருபக்கம், எப்பெருமானே! இனி செலவை சமாளிப்பது எப்படி என்ற யோசனை மறுபக்கம். 




அன்றைய தினம் ஞாயிறு காலை பிராத்தனை முடித்துவிட்டு, ராம்நாடு அரண்மனை வாசலில் உள்ள மைத்துனர் உணவு விடுதியை பார்வையிட்டுவிட்டு, எதிரில் உள்ள சந்தை சாலையில் நிதானமாக நடந்தேன். இதுவரை என்னை தன் தோள் மேல் வைத்து கூட்டிவந்த இறைவன் இனியும் வருவார், என்ற நம்பிக்கை. சிறிது தூரத்தில் "அருணா புத்தக நிலையம்" என் கண்ணையுறுத்தி, வாவா என்றது. அந்த புத்தக நிலையத்தில் ஒரு நியூமெராலஜி புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது



பண்டிட் சேதுராமன் எழுதிய "அதிஷ்ட விஞ்ஞானம்" என்ற அந்த ஒரு புத்தகம் மட்டும் எனக்கென்றே காத்திருந்ததாக உணர்ந்தேன். திருமணத்திற்கு முன் பல நியூமெராலஜி புத்தகங்களை படித்திருந்தாலும், இந்த புத்தகம் எனக்கு தெய்வீகமாக இருந்தது. நமது பெயரை ஆங்கில எழுத்தில் சரியான அதிர்வுடன் அமையும் போது அது எப்படி நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும், என்று நிறைய ஆராய்ச்சி அனுபவத்துடன் அந்த புத்தகம் இருந்தது. முக்கியமாக என் மகளுக்கு உடனே பெயர் வைக்கவேண்டும் என்ற காரணத்தால் அந்த புத்தகத்தை பெரிய மனதுபண்ணி பணம் கொடுத்து வாங்கினேன். என்ன தான் மகளுக்கு நியூமெராலஜிபடி பெயர் வைத்தாலும், நானும் அதை நேரடியாக அதற்குரிய தெய்வீக முறைப்படி பரிசோதித்து அனுபவிக்க முடிவு செய்தேன். ஆரம்பகட்ட குழந்தை வளர்ப்பிற்காக அன்னவள் அவள் தாய்வீடான ராம்நாட்டில் இருந்தது, என் பரிசோதனைக்கு மிகவும் வசதியாக இருந்தது. எனது பிறந்த ஆங்கில தேதி எண்கள் மற்றும் என் ஜாதகப்படி ஓரளவிற்கு சாதகமான கிரகங்களை கேட்டறிந்துவிட்டு, எனக்குரிய அதிஷ்ட எண் சூரியனுக்கானது "ஒன்று" எனப் புரிந்துகொண்டேன். 




எம்பெருமானே சூரிய நாராயணனாக இருப்பதால், மனமுறுகிய பிராத்தனைக்கும் இணக்கமாக இருப்பது ஆத்ம மகிழ்ச்சியாக இருந்தது. சூரியனுக்கான எண்ணில் அதிக சக்தி வாய்ந்த "நாற்பத்தியாராம்" எண்ணிற்கேற்றபடி என் பெயரில் ஆங்கில எழுத்துக்களை சிறிது மாற்றி குறித்து எடுத்துக் கொண்டேன்.


தொடரும்...

இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 2

பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 2

*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.


அப்படியே எந்திரம் போல் வேலை செய்வதும், எனக்கு தெரிந்தவாறு இறைவனை வணங்குவதுமாக நாட்கள் நகர்ந்தது. "முருகா நீ வரவேண்டும்..." என்ற பாடல் எங்கிருந்தோ ஒலித்து சிறிது நம்பிக்கை கொடுத்தது.  ஒரு நல்ல நண்பர் அமைவது இறைவன் கொடுத்த வரம். (இன்றைய வாலிபர்கள், குடிப்பழக்கத்தையும் பெண்களை சீண்டுவதையும் ஊக்கப்படுத்துபவனையே “நல்ல நண்பன்” என்கிறார்கள்.  என்ன? உங்கள் நண்பரும் இப்படியா??).  ஒரு நாள் என் அருமை நண்பர் சேதுபதி, "நண்பரே, உங்களிடம் தனியாக சிறிது பேசவேண்டும். மதிய இடைவேளையில் எனது பணி அறைக்கு வாரும்" என்று அழைத்தார். நான் சில நாட்களாக ஏதோ ஒரு கவலையிலும் குழப்பத்திலும் இருப்பதை, நான் எதுவும் சொல்லாமலேயே புரிந்துகொண்டு, "என்ன கவலை?" என நேரடியாக கேட்டார். நடந்ததை சொன்னேன். சிறிது மவுனத்திற்குப்பிறகு, சேதுபதி என்னிடம், "இறைவனை வணங்குவோர்க்கு கவலை தேவையில்லை. உங்கள் ஜாதகத்தை எடுத்து வாருங்கள். என் தந்தையிடமிருந்து நானும் சிறிது சோதிடம் கற்றுள்ளேன். அலசிப் பார்த்திடலாம்" என்றாரே பார்க்கலாம். 

எனக்கு சேதுபதியோடு பல வருடங்களாக அலுவலக பழக்கம் இருந்தாலும், அவருக்கும் சோதிடம் தெரியும் என்பது அன்றுதான் எனக்கு தெரிந்தது. மேலும் அவர், தான் யாருக்கும் சோதிடம் பார்ப்பதில்லை என்றும், ஏனோ எனக்குமட்டும் இறைவன் அருளால் இயன்றவரை தினமும் சிறிது சிறிதாக மதிய இடைவேளையில் ஆராய்ந்துபார்க்கலாம் என்றார். ஆகா! இறைவன் கருணையை என்னவென்று சொல்வது? அடியேன் எனக்கு பெரிதாக நண்பர்கள் கூட்டம் என்று சொல்வதற்கில்லை. விரல்விட்டு எண்ணும் அளவுதான். பன்றிக்கூட்டம்போல் பெரிய நண்பர்கள் கூட்டம் எதற்கு? சிங்கம்போல் ஒருவன் இருந்தால் போதுமே. ஒரு கிரக பலனும் இல்லாவிட்டால் என்ன? 


கூட்டம் கூட்டமாய் அசுரரைப்போல் கர்மவினைகள் வந்தால்தான் என்ன? ஒரு முருகவேல் எதிரில் வந்தால் அத்தனையும் தவிடுபொடி. ஓம் முருகா போற்றி.

மறுநாள் மதிய உணவை வேகமாக முடித்துக்கொண்டு என் ஜாதகத்தோடு நண்பரை சந்தித்தேன். அவர் நிறைய கணக்குகளை எழுதினார், எனக்கும் நிறைய ஜோதிட தத்துவங்களையும் பாவ புண்ணிய கணக்குகளையும் சொன்னார். அடியேனுக்கு ஓரளவுக்குத்தான் புரிந்தது, முழுவதுமாக புரியவில்லை. ஓம் அகத்தீசாய நம. அடுத்து வரும்போது, என் சகோதரி, தாய்மாமன் மற்றும் சகோதரியின் குழந்தைகளின் ஜாதகத்தையும் (நான் அவர்களுக்கு தாய்மாமன்) கொண்டுவரச்சொன்னார். இது அவர்களின் ஜாதகம் வழியாக என் ஜாதகத்திற்குள்ள தொடர்புகளை ஆராய்வதற்கு. இப்படியாக தினமும் மதியம் அரைமணி நேரம் சோதிட ஆராய்ச்சி மாதக்கணக்கில் நடந்தது! ஒருவனின் ஜாதகத்தின் மூலம் அறியும் பாவ புண்ணியங்கள், அவை முன் ஜென்மங்கள் மூலம் வருவது, என் ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் எப்படியெல்லாம் அடிபட்டு தன் பலத்தை இழந்தது, பாபகிரகங்களின் தாக்கம் என பல விஷயங்களை எனக்கு சொன்னார். இதில் என் மனைவி ஸ்தானம் மற்றும் அமைப்பை அதிக நாட்கள் எடுத்து பொறுமையாக சொன்னதுதான் இறைவன் அவர்மூலம் எனக்கு வழிகாட்டியதாக கருதுகிறேன். அவர் முதலில் கூறியது, "நண்பரே, உமது ஜாதகப்படி சுபக்கிரகங்கள் பலமில்லாததும், பாபகிரகங்கள் தாக்கம் இருப்பதும் உண்மைதான். இது முன்ஜென்ம கர்மங்கள் என எடுத்துக்கொள்ளலாம். எனினும், இறைவன் அருளால் ஒரு பொருத்தமான மனைவி உமக்கு அமைந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை நல்லநிலைக்கு வந்துவிடும். கவலை வேண்டாம். இறைவனை தினமும் நன்கு மனமுருகி வழிபடுங்கள். முக்கியமாக பிரதோஷ நாட்களில் சிவன் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வழிபடுங்கள். அது உங்கள் பாவங்களை நிச்சயம் நீக்கும். பிரதோஷ நேரத்தில் செல்ல இயலாவிடினும், அன்று மாலை அலுவலக பணி முடிந்தபின் சென்று வழிபட சொன்னார். அத்துடன், நல்ல மனைவி அமைய எம்பெருமான் நாராயணனை வாரம் ஒருமுறையேனும் கோவிலுக்கு சென்று வணங்குமாறு அறிவுறுத்தினார். எனக்கு பொருத்தமான மனைவியை பற்றி சொன்ன விஷயங்கள் அப்போது ஆச்சர்யமாக இருந்தது.



அன்னவள் எந்த திசையில் வசிக்கிறாள். அவளின் குடும்பத்திற்கான சமூக அந்தஸ்து, அவளின் நடை, உடை, உடல் ஆரோக்கியம், ஆபரண விருப்பங்கள், நிறம், எங்களுக்குள் இருக்கப்போகும் ஈர்ப்பு, மணபொருத்தம், சண்டை சச்சரவு, யார் யாரை அதிகம் அனுசரிபார் (தினப்பொருத்தம், கணப்பொருத்தம், வசியம் மற்றவை...), முக்கியமாக எளிதில் காணும்படியாக ஒரு மிகச்சிறிய உடல்குறை இருக்கும் என்று சொன்னார். இறுதியாகவும் உறுதியாகவும் அவர் சொன்னது "இறைவனை சரணடைவதே ஒரே வழி". என்னிடமிருந்து ஒரு சிறு எதிர்பார்ப்பும் இல்லாமல் நையாபைசாவுக்கும் பிரயோசனமில்லாத என்னை அவர் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொண்டார். இறைவனே எனக்காக இவரை அனுப்பிவைத்தார் போலும்.

அவர் கூறும் ஜோதிட கணிதம் எனக்கு புரியவில்லையே என வருந்தினேன். அவர், "கவலை வேண்டாம். இந்த கலியுகத்தில் ‘நியூமராலஜி’ என்ற ஆங்கில எண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சாஸ்திரம் உள்ளது. அது கலியுக மனிதர்களுக்கு பெரும்பாலும் பொருந்துகிறது. இந்த கலியுக பாஷையான ஆங்கிலம் கற்ற நம் பாரத தேசத்தார் நல்ல சம்பாத்தியம் செய்து, பொருளாதாரத்தில் உயர்ந்துவருகிறார்கள். இந்த சாஸ்திரத்தை புரிவதும் எளிது. நீங்கள் உங்கள் பிறந்த தேதியையே ஒரு மையமாக வைத்து நியூமராலஜி சாஸ்திரத்தை படித்துப்பாருங்கள்" என ஒரு குறிப்பு கொடுத்தார். அன்றுமுதல் தினமும் அலுவலகம் வரும்வழியில் உள்ள திண்டுக்கல் NGGO காலனி முருகன் கோவில் செல்வது, சனிக்கிழமை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில், பிரதோஷமன்று அபிராமி அம்மன் கோவிலில் உள்ள சிவன் மற்றும் பைரவர் வழிபாடு என்பது வாடிக்கையானது. மேலும் சகோதரன் சிவராம ராஜாவை சந்திக்க அடிக்கடி பழனி செல்லும்போது, பழனி முருகப்பெருமானை மலையேறி வழிபடுவது மிகுந்த ஆறுதலாக இருக்கும். தினமும் மாலை பணி முடிந்தவுடன் செயின்ட் மேரிஸ் ஸ்கூல் அருகிலிருக்கும் நண்பன் சுதாகர் கடைக்கு செல்வது வழக்கம். என்னால் அவனுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லாவிட்டாலும், ஓசியில் டீ வாங்கிக்கொடுத்து தினமும் அன்போடு வரச்சொல்பவன் அவன்தான். அவனது ரேடியோ கடையில் மாலைநேரம் தான் நல்ல வியாபாரம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அவன் அதிகம் பேசி வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். நான் அதிக நேரம் அவனுக்காக காத்திருக்கநேரிடும். அதனால், அவன் கடைக்கு அருகிலுள்ள "நியூ செஞ்சுரிஸ்" புத்தக நிலைய விற்பனையாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி, அங்குள்ள புத்தகங்களை ஓசியில் எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் நான் படித்துக்கொள்ளும்படி ஒரு அருமையான ஏற்பாடு செய்தான். இறைவனே எனக்கு ஆசிரியனாக இருந்து பாடம் கற்பிக்கும் அழகை என்னவென்று சொல்வது.


அன்று முதல் தினமும் ஒருமணி நேரம், அங்குள்ள அனைத்து நியூமராலஜி புத்தகங்களையும் எடுத்து, அதில் என் பிறந்த தேதிக்கான அமைப்பு மற்றும் எனக்கு பொருந்தும் மனைவி எண்களை ஆர்வமாய் படித்தேன்.  அதன்படி எனக்கு பொருந்தும் மனைவி எண்ணின் குணாதிசயங்களை கவனமாக படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது. நண்பர் சேதுபதி சொன்ன ஜாதக அம்ச குறிப்புகளோடு பெரும்பாலும் நன்கு பொருந்தி வந்தது. எனது எண்ணின் அமைப்பு, எனக்கு பொருந்தும் எண்ணின் அமைப்பு மற்றும் எனக்கு பொருந்தாத எண்ணின் அமைப்புகளை இறையருளால் புரிந்துகொண்டேன். எனது ஆங்கில பிறந்த தேதியிலிருந்து, ராகுவுக்கான எண் நான்கும் சனிக்கான எண் எட்டும் அடியேன் வாழ்கையில் சோதனைக்கான காரணம் என அறியும்போது அது ஜாதக பலனோடும் பொருந்தியது. மேலும், நான்கிற்கும் எட்டுக்கும் நன்கு பொருந்துவது எண் ஒன்றும் ஆறும் என ஆராய்ந்து குறிப்பெடுத்தேன்.  திருமணத்திற்கு ஏதோ ஒரு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, எனக்கு இன்ன இன்ன அமைப்போடு பொருந்தும் வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நான் ஒருவேளை கேட்டிருந்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை பின்னி பெடலெடுத்திருப்பார்கள். எனவே இறைவன் அருளால் கிடைத்த அத்தனை ஆராய்ச்சி முடிவுகளையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டேன். பதினாறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளிப்படுத்த குரு உத்தரவு கிடைத்தது.

சில மாதங்கள் கழித்து ஒருவழியாக என் தாய்மாமாவும் மாசிலா பெரியம்மாவும் கலந்துரையாடி மதுரையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் எனக்காக பதிந்தார்கள். என்ன ஆச்சர்யம்!, உடனே இருபத்தியிரண்டு பெண்களின் ஜாதகங்கள் கிடைத்தது. அதில் அடியேன் குறித்துவைத்த நியூமெராலஜி குறிப்புகளை வைத்து மூன்று பெண்களின் ஜாதகங்ளை நானே தேர்வு செய்து, ஜாதகபொருத்தம் பார்க்க வீட்டாரிடம் கொடுத்தேன். அதில் ஒன்று வத்தலகுண்டு, இரண்டாவது நிலக்கோட்டை, மூன்றாவது ராம்நாடு. "ஜாதகங்களை தேர்வு செய்யும் அளவுக்கு இவனுக்கு என்ன பெரிய சாஸ்திரம் தெரியும்?" என என்னை கோவித்தார்கள். அவர்கள் அந்த இருபத்தியிரண்டு ஜாதகங்களையும், மாமாவிற்க்குத் தெரிந்த திண்டுக்கல் கோர்ட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஜோதிடரிடம் எடுத்துச் சென்று ஆராய்ந்தார்கள். அந்த ஜோதிடரும் அதே மூன்று ஜாதகங்களைத்தான் தேர்வு செய்தார்!  அடுத்ததாக, யார் யார் பெண் பார்க்க செல்வது? எந்த பெண்ணை முதலில் பார்ப்பது? என்ற கலந்துரையாடல் நடந்தது. மாசிலா பெரியம்மாவும், தண்டபாணி மாமாவும் என்னையும் கூட்டிக்கொண்டு பெண் பார்க்க செல்லும் பொறுப்பை மகிழ்வோடு ஏற்றார்கள். எனக்காக குடும்பத்தார்கள் பொறுப்பெடுத்துக்கொள்வது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் மறுபக்கம் சிறிது பயமாகவும் இருந்தது. ஏனெனில், அனைவரும் நான் சம்பளத்திலிருந்து திருமண செலவிற்காக நிறைய சேர்த்துவைத்துள்ளேன் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், MCA படிப்பிற்காக சேமிப்பினையெல்லாம் செலவு செய்வதால், அடியேனிடம் ஒரு நையா பைசா கூட கிடையாது என்பது யாருக்கும் தெரியாது.

தொடரும்...

இப்படிக்கு,
அகத்திய பக்தன்.