ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தெய்வ வாகன ஞானம்

 தெய்வ வாகன ஞானம்



இந்து தெய்வங்களின் வாகனங்களில் இருக்கும் ஞான தத்துவ குறிப்புகளை இங்கு காணலாம்.


1) காளை - நந்தி - யோகியின் உடல்


வால்மீகர் ஞானம் - பாடல்

"சிந்தை தெளிந்து இருப்பவனாம் அவனே சித்தன்

செகமெல்லாம் சிவம் என்றே அறிந்தோன் சித்தன்

நந்தி என்ற வாகனமே தூல தேகம்

நான்முகனே கண் மூக்கு செவி நாக்கு ஆகும்

தந்திமுகன் சிவசக்தி திருமூச்சு ஆகும்

தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே"


நம் உடல் - சிவத்தைச் சிமக்கும் நந்தி என்னும் வாகனம்.


more in blog :-

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D


2) சிங்கம் - சிம்மவாஹினி - கேசரி முத்திரை

கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும்.

பராசக்தியை சிம்மவாஹினி என்று அழைத்ததன் பொருள்,  சிம்மம் என்ற கேசரி முத்திரைக்கு மேலே இருப்பவள், கேசரி முத்திரையை வாகனமாகக் கொண்டவள் என்பதே.

நம் குருநாதர், சௌமிய சாகரம்  பாடலில் இவளை "கேசரியாள்" என அழைக்கிறார்.

"பதிவான இடமதுதான் புருவ மத்தி

பரை ஞான கேசரியாள் இருக்கும் வீடு

விதியான வீடறிந்து கெதி என்றெண்ணி

மெஞ்ஞான அமுர்த ரசம் கொண்டாயானால்

மதியான சந்திரகலை ரவியில் சென்று

மகத்தான சோதி பிரகாசங் காணுங்

கெதியான சோதியான பிரகாசங் கண்டால்

கேசரத்தை ஆளுகிற வாசிதானே"


more in blog :-

https://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1


3) எலி - மூஞ்சூறு - முச்சுடர்

விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   


4) காகம் - நெருப்பு - காகபுசுண்டர்

பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நெருப்பு தத்துவம்.  நெருப்பு மூலக்கூறின் ரூபம். காகபுசுண்டர் கீழ்க்கண்ட தனது பாடலில், தான் பல யுகங்களாய், நெருப்பு ரூபத்தில் ( ஒளி உடலில் ) இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


காகபுசுண்டர் ஞானம் - பாடல் 48

பாரடா இப்படியே யுகங்கள் தோறும்

      பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி

ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?

      ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்

வீரடா விமலரிடஞ் செல்லும் போது

      வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;

காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!

      காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே



more in blog :- ( மயில், கோழி, ஆந்தை, வல்லூறு ).

https://fireprem.blogspot.com/2022/03/blog-post_27.html?m=1


5) நாய் - ஞமலி - நெருப்பு

பைரவரின் வாகனம்.

more in blog :-

https://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1


6) மான் (or) கலைமான் - வாயு - மனம்.

வாயுவின் வாகனம் - விசுத்தி

சந்திரனின் வாகனம் - மனம்


காலங்கிநாதர் - கால் என்றால் காற்று என்று பொருள். காற்றை ஆடையாக அணிந்தவர்.


7) குதிரை - பரி - வாசிக்குதிரை.

பிராண சக்தி.

சண்டிகேஸ்வரர் வாகனம் குதிரை.

சண்டிகேஸ்வரர் வாசியோகத்தின் உச்சமான மௌனத்தில் எப்போதும் லயித்திருப்பார்.


8) எருமை - மரணதேவன் எமதர்மனின் வாகனம் - நிதானம்.

 மரணம், முக்தி அடையும் வரை நிதானமாக வர வேண்டும். அவசரப்பட்டு வரக்கூடாது. அவசரம் எனில் மீண்டும் பிறந்து விடுவோம் அல்லவா.


9) மேலும் மற்ற வாகன விலங்குகளை, ஒரு யோகியின் மனோபாவத்தில் யோசிக்கவும்.


கேள்வி எழுப்பிய அருமை நண்பர் "அன்பாலயம் செல்வகணேசுக்கு" அனேக நன்றிகளை தெரிவிக்கிறேன்.


இப்படிக்கு,

அகத்திய பக்தன்.

புதன், 6 செப்டம்பர், 2023

வைணவ ஞானம்

 

வைணவ ஞானம்


 ஹரி ஓம் அகத்தீசாய நமஹ.


ஸ ஏவாயம் மயா தே1த்3ய யோக3: ப்1ரோக்11: பு1ராத1ன: |

4க்தோ1‌ஸி மே ஸகா2 சே1தி1 ரஹஸ்யம் ஹ்யேத1து3த்11மம் ||3||

பொருள் :-

BG 4.3: யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.

*** ஸ்ரீமத் பகவத் கீதை. 4-3 ஞான யோகம்.


  குருநாதர் அருளால் இந்த அரிதான ஞானப்பதிவு இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியிடப்படுகிறது. வைணவ மார்க்கத்தில் யோக ஞானத்தை, எப்படி புரிந்து பயிற்சி செய்வது, என்பதை குருநாதரின் கருணையினால் இப்பதிவில் நாம் பார்க்கலாம்.  அடியேன் நான், நம் குருநாதர் அருளியதை, இயன்றவரை மிகவும் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன். எனினும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.


 வெங்கடாஜலபதி :-

வேங்கடம் + ஜலம் + அதிபதி.

* வேங்கடம் எனும் தமிழ்ச் சொல் வேம் + கடம் = வெப்பமான காடு. இது யோகியின் சிரசைக் குறிக்கும்.

* ஜலம் - சிரசில் யோகத்தால் கிடைக்கும் அமிர்தம்.  இதையே அப்பு என்றும், அகாரம் என்றும்,  கங்கை என்றும் சொல்லுவார்கள்.

அதாவது யோக-அக்கினியால் சிரசில் உருவாகும் அமிர்தத்திற்கு அதிபதியானவரே, வெங்கடாஜலபதி என்று ஞானப் பொருள்படும்.


      எம்பெருமானின் கையில் இருக்கும் சக்கரம்,  யோகி தவம் செய்யும் ஆதார சக்கரத்தைக் குறிக்கிறது. பிரயோகத்தைப் பொருத்து இதன் கலைகள் மாறுபடும் ( பொதுவாக 16 கலைகள் ).  எம்பெருமானின் மற்றொரு கையில் இருக்கும் சங்கு, யோகிக்கு மட்டும் கேட்கும் நாதத்தை குறிக்கிறது. ஆதிசேஷன், ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் இந்த மூவரும், பிராணாயாமத்தின் மூன்று நிலைகளை குறிக்கிறது. இது முறையே ரேசகம், பூரகம் மற்றும் கும்பகம் எனப்படும். யோகியின் வாகனங்கள் இதுவே.


 ஆதிசேஷன் - ரேசகம் - சீறி வெளிவரும் வெப்பக் காற்று.

 ஆஞ்சநேயர் - பூரகம் -  உள்ளே இழுத்து, பெரிதாகும் காற்று.

 கருடன் - கும்பகம் - கும்பித்து நிலைக்கும் அல்லது பறக்கும் காற்று.


 யோக நரசிம்மர் :-

 வைணவத் திருத்தலத்தில் யோகநரசிம்மரின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிங்கமுகத்துடன் நரசிம்மர் யோகநிலையில் மௌனமாக அமர்ந்திருப்பார். அவருக்கு பின்னே சக்கரத்தாழ்வார் நின்று இருப்பார். வைணவத்தின் மிகவும் ரகசியமான யோகஞானம் இங்குதான் உள்ளது. பல காலம் மறைக்கப்பட்ட யோக ரகசியம் இன்று எம்பெருமானின் கருணையினால் வெளிப்படுகிறது. 

ஹரி ஓம் அகத்திசாய நமஹ.


 கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும் நரசிம்மரின் சிங்க முகம், கேசரி முத்திரையைக் குறிக்கிறது. அவரின் அமர்ந்த நிலை, யோகம் செய்வதை குறிக்கிறது. யோகியானவர் கேசரி முத்திரையின் மூலம் யோகம் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். அதாவது யோகியானவர் அண்ணாக்கிற்கு மேலே, புருவமத்திக்கு உள்ளே உள்ள சுழுமுனை நாடியில் கவனம் வைத்து, அதன் மூலம் தனது உயிரையும், அதற்கு மேலே பூரணத்தையும் உணர்வது. கேசரி முத்திரையைப் பற்றிய மேலும் பல அபூர்வ தகவல்களை இப்பக்கத்தின் கடைசியில் உள்ள "சாக்த ஞானம்" ( #1 ) என்ற பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

யோகியானவர் இப்படி கேசரி முத்திரையால் யோகம் செய்வதன் உச்சக்கட்ட நோக்கம் என்ன?  இதற்கான பதிலை தெரிந்து கொள்ள நாம் யோகநரசிம்மருக்கு பின்பக்கம் செல்ல வேண்டும்.



  யோகநரசிம்மருக்கு பின்னே இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள் இருக்கும். இது 16 கலை என்ற குறியீடு. இந்தக் குறியீட்டை நம் குருநாதர், "பூரணம்" என்று அழைக்கிறார்.  பரப்பிரம்மம் என்றும் கூறலாம். அகத்தியர் ஞானம் 16 என்ற ஞானப் பாடலில் நமது குருநாதர் இந்த குறியீட்டை தெளிவாக சொல்லியுள்ளார். அந்தப் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 16 - பூரணம் 

   8 - உயிர் 

   4 - மனம்


 இந்தக் குறியீட்டை நாம் வைணவத்தில் கீழ்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.

 16 - சக்கரத்தாழ்வார் - யோகியின் இலக்கான பூரணம்.

  4 - யோக நரசிம்மரின் நான்கு கைகள்-  மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் ஒடுங்கி கேசரியின் மூலம் யோகம் செய்தல்.

 8 -  பயிற்சிக்கான எட்டெழுத்து மந்திரம் ( ஓம் நமோ நாராயணா ).


கஜேந்திர மோட்சம் :-

 யோகத்தின் முக்கிய கதாபாத்திரம் சுழுமுனை நாடிதான்.  சித்தர்களும் ரிஷிகளும் சுழுமுனை நாடியை விநாயகரோடு அல்லது யானையின் தும்பிக்கையோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஆறு சமய வழிபாட்டிலும், விநாயகர் இல்லாமல் எந்த வழிபாடும் நடைபெறுவதில்லை. எனில், சுழுமுனை நாடியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். கஜேந்திர மோட்சத்தில் கஜேந்திரனாக காட்டப்படும் யோகியானவர் தன் சுழுமுனை நாடியில் மனம் வைத்து, இறைவனோடு சேர வேண்டி யோகம் செய்கிறார். அப்போது ஆணவம் என்ற "முதலை" யோகியின் காலை கவ்வி கீழ்நோக்கி இழுக்கிறது. ( சித்தர்கள் மூச்சுக் காற்றை "கால்" என்று பரிபாஷையாக குறிப்பிடுவார்கள் ).



 ஐயோ இந்த கொடூர அசுரனான "ஆணவ முதலை" என்னை இறைவனோடு சேரவிடாமல் தடுத்து கீழ்நோக்கி இழுக்கிறதே!! என்ற வேதனையோடு யோகி துடித்து துன்பப்படுகிறார்.  சிரமப்பட்டு தன் சுழுமுனை நாடியான தும்பிக்கையை தன் சகஸ்ர தளத்திற்கு மேலே யோகசூட்சுமத்தால் நீட்டி உயர்த்தி,  "ஆதிமூலமே என்னை காப்பாற்று" என எம்பெருமானை வேண்டி அழைக்கிறார். பிராணயாமத்தில் கும்பகத்தைக் குறிக்கும் கருட பகவான் உடனே எம்பெருமானை சுமந்துகொண்டு யோகியைக் காப்பாற்ற வருகிறார். எம்பெருமான் தன் சக்கரத்தை சுழற்றி வீச ஆணவ முதலை அழிகிறது. சுழுமுனை நாடி, ஏன் விநாயகர் அல்லது தும்பிக்கையோடு ஒப்பிடப்படுகிறது? என்பதனை பற்றிய பல சுவராசியமான தகவல்களை கீழே தனிப் பதிவாக "கணாபத்திய ஞானம்" ( #2 ) என்ற தலைப்பில் உள்ளது. படித்து புரிந்து கொள்ளுங்கள்.


 வைணவ யோகஞானப் பயிற்சி :-

 நினைக்கும் போதே துன்பம் நீக்கும், எம்பெருமானின் எட்டு எழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணா" என்பதை மூன்று பகுதியாக பிரிக்க வேண்டும்.

 ஓம் + நமோ + நாராயணா

 இவ்வாறு பிரித்ததை முறையே ரேசகம் பூரகம் மற்றும் கும்பகத்தோடு பொருத்தி, சுழுமுனையில் கவனம் வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.  இந்தப் பயிற்சியை தனிப் பதிவாக  "அனுபவ ஞானம் 2 - மந்திரம்" ( #3 ) என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இப்பதிவின் கீழே அதன் இணைப்பு உள்ளது.


கஜகேசரி யோகம் :-

 ஜோதிட சாஸ்திரத்தில் இந்த யோகம் மிகவும் பலமானதாகவும் அதிர்ஷ்டகரமானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பதிவில் எம்பெருமான் அருளால் இதன் யோகஞான நுணுக்கத்தை நாம் பார்க்க போகிறோம். மேலே கேசரியின் நுணுக்கத்தை "யோகநரசிம்மர்" மூலம் பார்த்தோம். அதற்குப் பிறகு கஜேந்திரன் நுணுக்கத்தில் "கஜேந்திர மோட்சம்" மூலம் பார்த்தோம். யோகியானவர் இந்த இரண்டு நுணுக்கங்களையும் இணைத்து இறைவனை வணங்கினால் அதுவே கஜகேசரி யோகம் எனப்படும்.

 இந்த யோகத்தை பயின்று சித்தியான நபரை யாரும் எளிதில் வெல்லவே முடியாது. ராவணேஸ்வரன் இந்த கஜகேசரி யோக நுணுக்கத்தின் மூலம் சிவனை வழிபட்டு, யாரும் வெல்லவே முடியாத ஆற்றலோடு இருந்தான்.   ஸ்ரீராமர், ராவணனை எப்படி வெல்வது என அறியாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அப்போது நம் குருநாதர், ராவணனை வெல்ல ஒரே வழி "ஆதித்ய யோகஞானம்" மட்டுமே! என ஸ்ரீராமருக்கு அறிவுறுத்தி "ஆதித்ய ஹிருதயத்தை" சொல்லிக் கொடுத்தார்.  ஓம் ஸ்ரீ ராம அகத்தீசாய நமஹ.



ஸ்ரீராமர் நம் குருநாதரின் ஆசிரமத்திலேயே தங்கி சூரியயோக ஞானத்தை (ஆதித்ய ஞானம்) பயின்று, ராவணனை வென்றார். ஸ்ரீராமர் "ஆதித்ய ஞானம்" பயின்ற இந்த குருநாதரின் ஆசிரமத்தில் இப்போது "பஞ்சமுக பிரத்தியங்காரா தேவி" ஆலயம் உள்ளது. உலகில் யாரும் செய்ய தயங்கும் பல அறிய யாகங்களும் தர்மங்களும் இங்கு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. நம் குருநாதரும், ஸ்ரீ ராமரும் தவம் செய்த தெய்வீகத் தாக்கம், இப்போதும் இந்த ஆலயத்தில் வலிமையோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தோடு இந்த ஆலயத்திற்கு சென்று   அருள் பெற வேண்டும் என அடியேன் வேண்டுகிறேன். நான் இந்த ஆலயத்தில் தியானம் செய்யும்போது, பலமுறை அபூர்வமான நாதங்களைக் கேட்டு உணர்ந்திருக்கிறேன்.
 ஆலயம் உள்ள இடம் : ராமேஸ்வரம் போகும் வழியில் மானாமதுரையில் வேதியநேந்தல் பஞ்சபூதேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது.



 அடியேன் "ஆதித்ய ஞானம்" என்ற அடுத்த பதிவை விரைவில் எழுதலாம் என நினைக்கிறேன். ஆனால் அடியேன் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் குறைந்தது 10 பேர்களாவது கேட்டுக் கொண்ட பின் எழுத ஆரம்பிக்கலாம் என காத்திருக்கிறேன். இனி குருநாதரின் சித்தம். 


கேள்வி :-
தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பதில் : சரணாகதமான பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனதை ஒருமுகமாக்கி, பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.

 மேலே குறிப்பிட்ட இணைப்பு பதிவுகள்.:-

 #1) சாக்த ஞானம்.


 #2) கணாபத்திய ஞானம்.


 #3) அனுபவ ஞானம் 2 -  மந்திரம்.


 #4) சைவ ஞானத்தையும் அறிய விரும்பினால், கீழே உள்ள நான்கு பதிவுகள்.






இப்படிக்கு,
அகத்திய பக்தன்.

சனி, 27 மே, 2023

சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 4

 

சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 4


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும். குருநாதர் அருளால் நமக்குக் கிடைத்த குறிப்புகளைப் பார்க்கலாம்.


ஊர்த்தவ தாண்டவர் :-

 சிதம்பரம் கோவிலின் உச்சகட்ட காட்சி இதுதான். சிவனும் காளியும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். காளியானவள் சிவனுக்கு சரியாக எல்லா வகையான ஆட்டத்தையும் ஆடுகிறாள். கடைசியில் சிவன் எளிதாக தனது வலது காலை முற்றிலுமாக தலைக்கு மேலே உயர்த்தி விட்டார். அப்படி உயர்த்திய வலது காலை நோக்கி தனது வலது கையையும் உயர்த்தி சுட்டிக்காட்டி விட்டார். பொதுவாக பின்கலை என்பது காந்த ஆற்றல் கொண்ட சிவனைக் குறிக்கும். இடகலை என்பது வெப்ப ஆற்றல் கொண்ட சக்தியை குறிக்கும். சக்தியால் பிரபஞ்சத்தின் வெப்பமண்டலம் வரை எளிதில் செல்ல முடியும். மேலும் பிரபஞ்சத்தின் காந்த மண்டலத்தில் ஓரளவிற்கு மட்டுமே ஊடுருவ முடியும். ஆனால் அவளால் கண்டிப்பாக வெட்டவெளி என்னும் பூரணத்திற்குள் செல்லவே முடியாது. சிவனால் மட்டுமே பின்கலையை முழுவதுமாக உயர்த்தி, அப்படியே நிறுத்தி, வெட்டவெளிக்குள் ஊடுருவி செல்ல முடியும். யோகியானவர் இந்த நிலையில், தனது உடல் உள் உறுப்புகளின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தி, சமாதிக்குள் சென்று கொண்டிருப்பார். அவர் காந்த மண்டலத்தைத் ( பாதரச ஆற்றல் ) தாண்டும் பொழுது உடுக்கை  நாதம் அவருக்குக் கேட்கும்.



 இறுதியாக போட்டியில் காளி தோற்று விடுகிறாள், சிவபெருமான் ஜெயித்து விடுகிறார். பின்னர், தலைவர் காளியாத்தாளை கச்சிதமாய் தன் கைக்கு அடங்கிய காதலியாக்கி அருகே வைத்துக் கொண்டார்.

 ஆற்றல்களின் பயணம் மற்றும் தன்மையைப் புரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு உதவும்.


 ஆற்றல்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் கீழே உள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.


 உங்கள் மனதில் உள்ள கேள்வி:-

 இந்த யோக நுணுக்கங்களை யார் கற்றுத் தருவார்?

 நம் கொண்டைக்கார குருநாதரால் மட்டுமே கற்றுத் தர முடியும். அதுவும் சுழுமுனை நாடியில் வந்து, உயிர் தரிசனம் தந்து, கற்றுத் தருவார். ஆனால் அவர் சில விஷயங்களையும் புரிதலையும் முதலில் எதிர்பார்ப்பார்.



 அதை விளக்கமாக அடுத்த பதிவான "ஞானச் சரவெடி"யில் விரைவில் பார்க்கலாம்.  அதுவரை நம் குருநாதர் கண்டிப்பாக எதிர்பார்க்கும் அடிப்படைத் தகுதியான "ஆன்ம சுதந்திரம்" என்ற மனப்பக்குவத்தை பற்றிய கீழ்கண்ட பதிவுகளை முழுமையாகப் படித்து, உணர்ந்து, இறைவனிடம் அதையே தினமும் தவறாமல் பணிந்து வேண்டுங்கள்.  கீழே உள்ள பதிவுகளில் ஒரே விஷயத்தை தான் வேறு வேறு விதமாக எழுதியிருப்பேன். சலிக்காமல் அனைத்தையும் படித்து விடுங்கள். ஏனெனில் அவ்விதமே உங்கள் ஆழ்மனம் வரை ஊடுருவி செல்ல வேண்டும், என்பதற்காகவே அப்படி எழுதப்பட்டது.










தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனது ஒருமுகமாக்கி பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.


 முடிவுரை :- 

 நம் குருநாதரின் அருளால் இயன்றவரை சில பூட்டுகளை திறந்து விட்டோம் என்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவான "ஞானச் சரவெடி" யில் சந்திப்போம்.



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.




சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 3

 

சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 3


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.


 தட்சணாமூர்த்தி :-  

சென்ற பதிவில் பார்த்த அதே காலை மடிக்கும் நுணுக்கம்தான், ஆனால் இடது காலை வலது காலின் மேல் மடக்கி வைத்துள்ளார். கற்பக விருச்சமாய் ஞானம் அவர் தலைக்கு மேல் நன்கு வளர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் இவர் கையில் மீண்டும் அக்கினி வந்துவிட்டதை கவனியுங்கள்.




யோகி இந்த நிலையில் குடும்ப நிலையை கடந்து பெரும்பாலும் மௌனம் அல்லது சமாதி நிலையிலேயே இருக்கிறார்.  மௌனமே ஞான வரம்பு  என்ற ஔவையின் வாக்கை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். 

காது பொத்தர் என்ற இருவர் அருகே இருப்பார்கள். சிவயோகி, தனக்கு மட்டும் கேட்கும் நாதத்தையே கவனிக்கவேண்டும் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்கள்.



 கீழே உள்ள படம் பரமஹம்ச யோகானந்தரின் கிரியா யோக  நுணுக்கம். இப்போது மேலே காது பொத்தரின் படத்தையும். கீழே உள்ள கிரியா யோகம் நுணுக்கத்தின் படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கே புரியும். கிரியா யோகத்தை பழக விரும்புவோர் பரமஹம்ச யோகாநந்தரின் யோக அமைப்பை இணையதளத்தில் தேடி தொடர்பு கொண்டு கிரியா யோகா பழகலாம்.





 உண்மையில் தட்சணாமூர்த்தி தன் வாயால் எதையும் உபதேசிக்கவும் இல்லை, அவருடைய சீடர்களான முனிவர்களும் அவர்களுடைய காதுகளால் எதையும் கேட்கவும் இல்லை.  இங்கே மகாரம் என்ற மௌனமே ஞானம் ஆகும். யோகி ஆனவர் தனது உச்சகட்ட மவுனத்தால் "தான் அவன் ஆகுதல்" அதாவது "தத்துவமசி" என்ற உயர்நிலைக்கு மாறுகிறார்.


(  சிதம்பரம் கோவிலில் தட்சிணாமூர்த்தி, சண்டேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரரையும் கவனிக்க மறந்து விட்டேன். அடுத்த முறை செல்லும் பொழுது குறிப்பெடுத்து எழுதுகிறேன். )



 நர்த்தன கணபதி :-

 வெளிப் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது, கிழக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தூணில் நடன கணபதி  செதுக்கப்பட்டிருக்கும். இவர்  வலது காலை உயர்த்தியும், இடது காலை ஊன்றியும் நடன கோலத்தில் இருப்பார்.  உயர்த்திய வலது காலை பார்ப்பது போல் ஒரு பல்லி இருக்கும்.  அந்த வலது பல்லியின் வாலும் மேல் நோக்கி வளைந்து இருக்கும். ஊன்றிய இடது காலைப் பார்த்தபடி மற்றொரு பல்லி இருக்கும், அதன் வாலும் வளைந்து கீழ்நோக்கி இருக்கும். அவரின் தும்பிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கும். இங்கே பல அற்புத யோகஞான குறிப்புகள் உள்ளது.




 சிவன் ஆன்மாவைக் குறிப்பவர். 
 சக்தி உயிரை ( ஒற்றை அணு அல்லது வாலை ) குறிப்பவர். 
 கணபதி சுழுமுனை நாடியை குறிப்பவர். "சுருண்ட முனை" என்பது சுழுமுனை ஆச்சு. அதாவது சுருண்ட தும்பிக்கையை இது குறிக்கிறது. தும்பிக்கை இடப்பக்கமாகவோ அல்லது வலப்பக்கமாகவோ அசையலாம்.  கணபதி என்ற சுழுமுனை நாடி,  தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டார். ஆனால் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, தான் சாதிக்க விரும்புவதை சாதித்து விடுவார். தேவையான அளவுக்கு நீட்டிக் கொள்ளும் தும்பிக்கையின் மூலம் தாய் தந்தையரை சுழற்றி வந்து, உலகத்தையே சுற்றி வந்ததாக சொல்லி, ஞானப்பழத்தைப் பெற்றுக் கொள்வார்.  விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.   விநாயகர் ஔவைக் கிழவியை தன் தும்பிக்கையால் வளைத்துப் பிடித்து, தும்பிக்கையை நீட்டிக்கொண்டே போய், கைலாசத்தில் ஔவையாரைச் சேர்த்தாராம். இது எப்படி என்று இப்போது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.




கீழே, தும்பிக்கை நுனியில் சங்குடன் நடன கணபதி, மிகுந்த அபூர்வமான யோக நுணுக்கம் கொண்டது. இடதுகாலை ( இடகலையை ) சிறிது உயர்த்தி தும்பிக்கை நுனியில் சங்கை காட்டுவது, யோகிக்கு கிடைக்கும் நாத ஓசையைக் குறிக்கிறது.




 ஆறுமுகன் தலைமைச் சுரபியை குறிப்பவர். தலைமைச் சுரபியான முருகனால் உடலில் ( உலகில் ) உள்ள அனைத்து சுரப்பிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும், சூட்சுமமாக சுற்றிவர முடியும். ஆனால் அவரால் வாலை எனும் வள்ளியை நெருங்க முடியாது, அதற்கு சுழுமுனை நாடி என்னும் விநாயகரின் துணை தேவை.




 ஆன்மா தனக்குக் கிடைக்கும் சூரிய ஆற்றலை உயிருக்கு அனுப்பி விடும். உயிர் அதை காந்த ஆற்றலா அல்லது வெப்ப ஆற்றலா என்பதைப் பிரித்து உணர்ந்தபின்,  சுழுமுனை நாடிக்கு கொடுத்துவிடும். சுழுமுனை நாடி, தனக்கு வரும் ஆற்றல் காந்த ஆற்றல் எனில் வலது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும், அதுவே வெப்ப ஆற்றல் எனில் இடது பக்கமாக வளைந்து பெற்றுக்கொள்ளும். சுழுமுனை நாடி இவ்வாறு பகுத்து உணர்ந்த ஆற்றலை தலைமை சுரபிக்கு அனுப்பி விடும். ( இந்தப் பதிவு நீண்டு கொண்டிருக்கிறது. மேற்கண்ட ஆற்றல் பரிமாற்றத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், நீங்கள் "மூளை எனும் தலைமை சுரபி" என்ற நூலை 


வாங்கி படியுங்கள் )


 இப்படிக் கிடைக்கும் காந்த ஆற்றலை இந்திரியம் அல்லது விந்து என்று சொல்லுவார்கள். சுழுமுனையின் இடது பாகத்தை பெண் என்று சொல்லுவார்கள். இப்போது நம் குருநாதரின் ஒரு ஞானப் பாடலை பார்த்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கி

உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்

பெண்ணின்பால் இந்திரியம் விடும்போது எல்லாம்

பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே யாகும்

தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்

மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார் பாரு

மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே"

 
யோகியானவருக்கு குருநாதர் சுழுமுனை நாடியில் இருந்து பரிசளித்த யோக நுணுக்கத்தின்படி, காந்த ஆற்றல் எனும் இந்திரியத்தை பெண் எனும் இடது பாகத்தில் செலுத்தும்போது, வலது கலையை உயர்த்தி நிற்பார். இதனால் அவர் மரலிகை எனும் மரணத்தில் அகப்பட மாட்டார்.

 இந்தப் பாடலை அபத்தமான பொருளில் புரிந்து கொண்டவர்கள் பல ஆயிரம் பேர்கள். இப்படி எல்லா பாடலுக்கும் ஒவ்வொரு வரிக்கும் உள்ள பொருளை எதிர்பார்க்காதீர்கள். அது மிகவும் கடினம், மேலும் குருநாதர் வராமல் அதனால் ஒரு பயனும் இல்லை. சுலபமான வழி யாதெனில் நம் குருநாதர் அகத்தீசரின் பாதத்தை உங்கள் உயிரில் பணிவை வைத்து முழுமையாக சரணடைவது மட்டுமே. அடியேன் நான் "குருநாதர்" என்று எப்போது குறிப்பிட்டாலும் அது "அகத்தீசரை" மட்டுமே, மனித குருமார்களைக் குறிப்பிடுவது அல்ல.  



சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.

சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 2


 சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 2


ஓம் அகத்தீசாய நமஹ.


இதற்க்கு முந்தைய பகுதியை படித்துவிட்டு இதைத் தொடரவும்.


கால சம்ஹார மூர்த்தி :-


வெளிப்பிரகாரத்தில் உள்ள தூணில் மேற்கு பார்த்தபடி இவர் சிலை இருக்கும். சிவபெருமான் தனது வலது காலை சற்றே உயர்த்தி, காலன் என்ற எமனின் மேல் வைத்து, மார்க்கண்டேயனை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார். 



யோகியானவர் தனது பின்கலையை சற்றே உயர்த்தி, யோக நுணுக்கத்தால் தனக்கு வரும் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்.

மார்+கண்+டேயர் => மார்பில் உள்ள யோக கண் என்பது அனாத சக்கரம் அல்லது இருதய சக்கரம் ஆகும். அனாகதம் என்றால் சமஸ்கிருதத்தில் "தாக்கப்படாதது" என்று பொருள். இந்த சக்கரம் பிராணனை சேமித்து விநியோகிக்க பயன்படுகிறது. தவத்தில் இருக்கும் யோகி தன் இருதயத்துடிப்பை நிறுத்தினாலும், ஏற்கனவே சேமித்த பிராண சக்தியை பின்கலை வழியாக உபயோகித்து தனக்கு வரும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.


 சோம ஸ்கந்தர் :-


மேற்கண்ட அதே தூணில் வடக்கு பக்கம் சோமஸ்கந்தர் சிலை இருக்கும். இதில் சிவபெருமான் தன் மனைவி குழந்தை என குடும்பம் சகீதமாக, சாந்த சுரூப சம்சாரியாக அமர்ந்திருப்பார். அவரின் தலைக்கு மேல் மற்றொரு பெண் அமிர்தத்தை கொட்டிக் கொண்டிருப்பாள். சிவபெருமானிடம் வழக்கமாக இருக்கும் அக்கினியும் உடுக்கையும் சம்சாரி கோலத்தில் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக மாய மனதிற்கான மானை இடது கையிலும், கோபத்தை ஒழிக்கும் கோடரியை வலது கையிலும் வைத்திருப்பார். சிவபெருமான் அமர்ந்த நிலையில் தனது இடது காலை சரிபாதியாக மடித்து, தனது வலது காலுக்கு அருகில் வைத்திருப்பார். அதாவது மடித்த இடது கால், வலது காலில் படாதவாறு வைத்திருப்பது முக்கியமானது. இந்த நுணுக்கம்தான் அவர் தலையின் மேல் இருக்கும் பெண்ணை அமிர்தம் கொட்டச் செய்ய வைக்கிறது. கோபம் வரும்போதெல்லாம் வலது கண்ணில் கவனத்தை செலுத்தி அதை கையாளுகிறார், மனம் மயங்கும் போதெல்லாம் இடது கண்ணில் கவனத்தை செலுத்தி அதையும் கையாளுகிறார். அப்போது தானே இரண்டு பெண்களிடம் ஒழுங்காய் குடும்பம் நடத்த முடியும்! 




 யோகியானவர் இடகலையை சரியாக மடக்கிய நுணுக்கத்தால், இல்லற வாழ்வு பாதிக்காத வகையில், ஒரு பக்கம் தன் மனைவிக்கு அன்புக் கணவனாகவும், குழந்தைகளுக்கு தகப்பனாகவும் வாழ்ந்து கொண்டு, மறுபக்கம் தன் தலைக்குள் இருக்கும் தன் உயிர் என்ற வாலைப் பெண்ணோடும் ரகசியமாய் சரசமாய் ( சரம் அம்சமாய் ) வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிரசுக்குள் இருக்கும் சீமாட்டியும் அன்பிற்க்குப் பிரதிபலனாய் அமிர்தத்தைப் பொழிகிறாள். ஒருவர் இரண்டு பெண்களிடம் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். 
 கடந்த 2015 ஆம் ஆண்டு குருநாதர் எனக்கு உயிர் தீட்சை தந்த பின், நான் தினசரி காலையும் மாலையும் தவறாமல் தியானம் செய்யும் பழக்கத்தில் இருந்தேன். இந்த தினசரி பழக்கம், எனது மனைவிக்கு பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. எங்கே தன் கணவன் இப்படியே சாமியாராக மாறி விடுவானோ என்ற பயமும் கோபமும் அன்னவளை ஆட்கொண்டது. நிலைமை விபரீதமாவதற்குள் குருநாதர் அருளால் சமாதானம் செய்து விட்டேன். நான் தினசரி தியானம் செய்வதால், எந்த வகையிலும் சாமியாரோ பிரம்மச்சாரியோ அல்ல, என்பதை சரியாக விளக்கிப் புரிய வைத்தேன். இப்படி உள்ளேயும் வெளியேயும் இரண்டு பெண்களை சமாளித்து குடும்பம் நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை கீழே உள்ள பாடலின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

"ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே
கண் கொண்டு பாரும் அய்யா
வரம் ஒன்று தாரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஆற்றில் ஒரு காலை வைத்தான்

சேற்றில் ஒரு காலை வைத்தான்

சிவனே சிவனே சிவனே
கூழுக்கும் ஆசைப் பட்டான்
மீசைக்கும் ஆசைப் பட்டான்
மகனே மகனே மகனே
பறந்தோடி வாரும் அய்யா
பாவத்தைத் தீரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஒரு தாரம் தலையில் வெச்சுமறு தாரம் பக்கம் வெச்சசிவனே சிவனே சிவனேகைக்குள்ளே கனியும் உண்டுகாயை ஏன் தேடிப் போனான்சிவனே சிவனே சிவனேபடித்தாலும் புத்தி வல்லேபுரியாத மக்குப் புள்ளேமகனே மகனே மகனேதலைவா உன் அருளைக் கூட்டுதெளிவான வழியைக் காட்டுஈசா சர்வேசா எனை ஆளும் மகராசாஅய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா"


பாடலையும் கீழே கேளுங்கள்.




 சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....



 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.






சிதம்பர ஞானம் / சைவ ஞானம் - பகுதி 1

 சிதம்பர ஞானம்  /   சைவ ஞானம் - பகுதி 1


ஓம் அகத்தீசாய நமஹ.


 குருநாதர் அருளால் கடந்த வாரம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி பலரும் பல பதிவுகளை இணையதளத்திலும் யூட்யூபிலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள். நாம் இந்தப் பதிவில் குருநாதர் அருளால் நமக்கு புரிந்த சில யோகஞான நுணுக்கங்களை பார்க்கலாம்.




 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோயில்களுக்கு சென்று வழிபட்டது முழுமையான பக்தி மார்க்கமாக எனக்கு இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இறுதியில் நம் குருநாதர் அருளால் எனக்கு கிடைத்த "கலியுக காவியம் -  ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை படித்த பிறகு எனது புரிதலில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. 


பழமையான கோயில்களுக்கு செல்லும்பொழுது "வெளியே" பக்தி மார்க்கமாய் வணங்கினாலும் "உள்ளே" குருநாதர் நமக்கு ஏதோ சூட்சுமங்களைச் சொல்வதாகவே உணர்வேன்.  எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது ரிஷி முனிவர்கள் தாங்கள் பயின்ற ஆன்ம முன்னேற்றம் காண உதவிய பல யோக ஞான தத்துவங்களையும் நுணுக்கங்களையும் சாமர்த்தியமாக தெய்வ சிலை வடிவங்களில் புகுத்தி இருக்கிறார்கள். நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம்.


 பழமையான கோயில் சிலைகளை காணும் பொழுது நான் முதலில் அந்த தெய்வங்களின் கால்களை கவனிப்பேன்.  இரண்டாவதாக கைகள் மற்றும் கைகளில் ஏந்தியவைகளை கவனிப்பேன். மூன்றாவதாக அந்த தெய்வத்தின் முகபாவம். நான்காவது ஒட்டுமொத்த உருவமும் சொல்லும் செய்தி. இறுதியாக அந்த தெய்வத்திற்கு உண்டான வாகனத்தை கவனிப்பேன்.  நான் குறிப்பிடுவது குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் மற்றும் ஏதாவது ஒரு மகாசித்தரோடு தொடர்புடைய கோயிலாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற கோவில்களில் குறியீடுகளை மாற்றி தவறாக  அமைத்திருக்கலாம்.


 சித்தர்கள் பரிபாஷையில் "கால்" என்றால் "காற்று" என்று பொருள். இடது நாசி சுவாசத்தை இடகலை என்பார்கள். மேலும் உகாரம் அல்லது பெண் அல்லது சந்திரன் அல்லது மதி என்றும் சொல்லுவார்கள். வலது நாசி சுவாசத்தை பின்கலை என்பார்கள். மேலும் அகாரம் அல்லது ஆண் அல்லது சூரியன் அல்லது ரவி என்றும் சொல்லுவார்கள்.


 இப்போது சிதம்பரம் கோவிலின் கதாநாயகனான நடராஜர் சுவாமி சிலைக்கு வருவோம். நடராஜர் தனது இடது காலை உயர்த்தி, அதை தன் இடது கையால் சுட்டிக் காட்டுகிறார். தனது வலது காலை சிறிது தாழ்த்திய வகையில் கீழே ஊன்றியுள்ளார்.  இந்த கால் நுணுக்கத்தின் பலனாக இடது கையில் அக்கினியை உயர்த்திக் காட்டுகிறார்.  




யோகியானவர் தனது இடகலையை சிறிது உயர்த்தியும், பின்கலையை குறிப்பிட்ட அளவு தாழ்த்தியும் செய்து,  சுழுமுனை நாடி வழியாக தவம் செய்யும் போது, தனது உயிரின் இருப்பிடத்தை அக்கினியாக ( வன்னி ) காண்பார், என்ற யோகஞான தத்துவத்தை நாம் குருவருளால் புரிந்து கொள்ளலாம். 

 காகபுசுண்டர் தனது ஞானப்பாடல் 80 என்ற நூலில் இந்த யோக ஞான தத்துவத்தை கீழ்கண்டவாறு தெளிவாக சொல்லியுள்ளார்.

காகபுசுண்டர் ஞானம் 80 – பாடல் 17 & 18.

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
      பாடுவா னொருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
      என்மகனே மதியென்ப ததற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
      
கண்டுபார் ரவியென்று கருத லாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும்   மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17

பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
      
பார்தனிலே அறுபத்து நாலு யோகம்
ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக   அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து   நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே   விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18

காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு   காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்”


கீழே பாடலைக் கேட்கலாம். 13 ஆம் விநாடியிலிருந்து கவனியுங்கள்.



கீழே நம் குருநாதர், இடது காலை மடித்து, யோகப் பட்டை ( belt ) அணிந்து, தவம் செய்வதைப் பாருங்கள்.



குறிப்பு :- யோகியானவர் என்றால் யோகி மற்றும் யோகினி என்ற இருபாலரையும் குறிக்கும்.

ஆச்சர்யம். குரங்கின் தவம். அதுவும் இடக்காலை உயர்த்தி, முதுகை நிமிர்த்தி !!!
தன் இடது நாசி சுவாசத்தைக் கையாளுகிறதோ?






சிதம்பர ஞானம் மேலும் தொடரும்.....


 இப்படிக்கு,
 அகத்திய பக்தன்.







வெள்ளி, 14 ஏப்ரல், 2023

சித்தர்கள் வெட்டிய குழிகள்.

  சித்தர்கள் வெட்டிய குழிகள்.


 நமது உடலில் நமது ஆன்மாவே சிவனாகவும், நமது உயிரே சக்தியாகவும், சுழுமுனை நாடியே விநாயகராகவும் உள்ளார்கள். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து யோகப் பயிற்சிகளை செய்து பல அறிய சக்திகளை சித்தர்களும் முனிவர்களும் பெற்றார்கள்.  இதில் முக்கியமான யோகம் நுணுக்கம், சிவனையும் சக்தியையும் இணைப்பது. அதாவது யோகக்கலையின் மூலம் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் செய்விப்பது. இதனால் அற்புதமான பிரபஞ்ச ஆற்றலை பெற்று ஒளியுடல் பெறுவது, உலக நன்மைக்காக பயன்படுத்துவது, தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற செயல்களை சித்தர்கள் செய்தார்கள். 




முந்தைய காலகட்டத்தில் இந்த அரிய யோக நுணுக்கத்தை அறிந்த சித்தர்களும் முனிவர்களும் இமயமலையில் மட்டுமே இருந்தார்கள். இதனால் இந்த இமயமலை பகுதியில் மட்டுமே பிரபஞ்ச மின்காந்த ஆற்றல் அதிகமாக பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பிரபஞ்ச ஆற்றல் தெற்கு பகுதியிலும் பாய வேண்டும் என்று முருகப்பெருமான் விரும்பினார். சிவ ஆற்றல் பெற்ற ரிஷிகள் மற்றும் முருகப்பெருமானின் விருப்பத்திற்கு இணங்க, நமது குருநாதர் சிவனுக்கு சமமான அகத்தீசர் தெற்கே பொதிகை நோக்கி வந்தடைந்தார். தமிழகத்தின் பல மலைப் பிரதேசங்களிலும் பல ஆசிரமங்களை அமைத்து தனது சித்த பரம்பரையை விரிவு படுத்தினார். குருநாதரின் வேண்டுதலை ஏற்ற 18 சித்தர்களும் அவர்களது நேரடி சீடர்களும் தமிழகத்தின் பல இடங்களில் தவங்களை செய்து பிரபஞ்ச சிவ சக்தி திருமண ஆற்றலை நமது தமிழகத்தில் அபரீதமாக பாயும் படி செய்தார்கள்.


 சித்தர்களின் காலத்திற்குப் பிறகும் (அதாவது இந்த கலியுக எல்லைக்காலம் வரையிலும்) இந்த அரிய யோகக் கலையை பலரும் பயின்று நாம் வாழும் பகுதிக்கும், நமது மனித சமூகத்திற்கும் பிரபஞ்சத்தின் சிவசக்தி ஆற்றலை ஈர்த்துக் கொடுக்க வேண்டும் என சித்தர்கள் விரும்பினார்கள். இதற்காக இந்த யோகக்கலையை பல சித்த நூல்களில் எழுதினார்கள். ஆனால் இந்தக் யோகக்கலையில் முன்னேறுபவர்கள் கண்டிப்பாக சுயநலம், மாய கர்ம ஆணவத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கக்கூடியவர்களாகவோ இருக்கக் கூடாது. ஏனெனில் இந்த உணர்வுகள் நமது மூளையில் எதிர்மறையான இரசாயனத்தை சுரந்து நமக்கும் நம்மை சூழ்ந்து இருப்பவருக்கும் தீங்கு விளைவிக்கும். இதற்காக நமது சித்தர்கள் அவர்களது யோக பாடல்களுக்கு நடுவே பல ரகசிய குழிகளை சாமர்த்தியமாக வெட்டி வைத்தார்கள். யோகத்தில் முன்னேறி பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கக் கூடிய வல்லமை கொண்டவர்கள் இந்த குழிகளில் எக்காரணத்தை கொண்டும் விழ மாட்டார்கள். அதாவது இந்தக் குழியில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கவே இருக்காது. ஒருவேளை ஒரு யோகிக்கு இந்த குழிகளில் ஏதேனும் ஒன்றில் ஆர்வம் ஏற்பட்டு விட்டால் அந்த யோகி மேலும் முன்னேற முடியாமல் அவர் அந்த குழியிலேயே விழுந்து முடங்கிப் போவார். சித்தர்களின் இந்த ரகசிய திட்டத்தை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இப்படி சித்தர்கள் வெட்டிய பல நூற்றுக்கணக்கான குழிகளில் சில குழிகளை மட்டும் இந்த பதிவில் காண்போம்.




 1) பெண் வசிய குழிகள் :-

 யோக பாடல்களுக்கு நடுவே சித்தர்கள் சில பாடல்களில், பெண்களை வசியப்படுத்துவது எப்படி, பெண்ணிடம் அதிக நேரம் புணர்ச்சி செய்வதற்கான வழிகள், அதற்குரிய மை தயாரிக்கும் முறை அல்லது தைலங்களை தயாரிக்கும் முறை என்று எழுதியிருப்பார்கள். உதாரணமாக கீழே உள்ள பாடலை பாருங்கள்.

நூல்: காகபுசுண்டர் ஞானம் 80.

பாடல் 77.

நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து

நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு

வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்

வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.



 விளக்கம்:  வேசையர் என்றால் பெண்கள் என்று அர்த்தம். பல பெண்களும் இவர் மேல் மயங்கி வருவார்கள் என்று பொருள். உண்மையில் அப்படி மையும் கிடையாது தைலமும் கிடையாது. உண்மையில் பெண்ணாசை கொண்டவர்கள் இந்த மையோ அல்லது தைலத்தை தயாரிப்பதிலேயே காலத்தை கடத்தி விட்டு யோகத்தில் முன்னேறாமலே போய்விடுவார்கள். போகநாதர் இதுபோன்ற குழிகளை அவரின் பாடல்களில் அதிகமாக வெட்டிவைத்தார். தன் பெயரிலேயே ஒரு குழியையும் வைத்தார் பாருங்கள்.


 2) ஆணவ குழிகள் :-

ஆணவம் எனப்படுவது "தான்" செய்வது மட்டுமே சரி  என வாதாடுவது அல்லது தற்பெருமை கொள்வது. அனைத்து சித்தர்களும் அவரவர் நூல்களில் ஆணவத்திற்கான குழிகளை அதிகமாக வெட்டி வைத்தார்கள். இதில் அதிகமான மற்றும் ஆழமான ஆணவக் குழிகளை வெட்டியவர் நமது சிவவாக்கிய சித்தரே ஆவார். யோக மார்க்கத்தில் முன்னேற கடுமையான பயிற்சிகள் எடுப்பவர்கள் அனைவரும் எளிதாக இந்த சித்தரின் ஆணவக் குழிவயில் விழுந்து விடுவார்கள். 18 சித்தர்களும் அவர்களின் பாடல்களில், பல பாடல்கள் பக்தி மார்க்கத்தில் வழிபடுவது முட்டாள்தனமானது, கோவில் வழிபாடு தேவையற்றது என எழுதி இருப்பார்கள். ஆனால் அனைத்து சித்தர்களும் ஜீவசமாதி ஆனது என்னவோ கோவில்களில்தான். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் நமது சித்தர்கள் ஏன் இவ்வாறு ஆணவக் குழிகளை வெட்டினார்கள் என்று. ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் யோக மார்க்கத்தில் எளிதாக முன்னேறுவதற்கு மனம் உருகிய பக்தி வழிபாடு அவசியம். இறையாற்றலை நாம் பெறுவதற்கான பயிற்சிகளை, நாம் உள்ளேயும் செய்ய வேண்டும், வெளியேயும் செய்ய வேண்டும். இந்த "உள்ளே வெளியே" தத்துவத்தை வெகு தெளிவாக சித்தர்கள் விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலின் பெயர் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதம்". நூல் கிடைக்கும் இடம் பாண்டிச்சேரி ஞானாலயம்.




சிவவாக்கியர் பாடல் 34 முதல் 36 வரை :-

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!


பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.

பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?

ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?

ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!



 3) ரசவாத குழிகள் :-

 சித்தர்கள் அவர்களின் ஞான பாடல்களில் தங்கம் செய்வதற்கான ரசவாத பாடல்களை நிறைய எழுதி இருக்கிறார்கள். அதாவது இரும்பு அல்லது செம்பு அல்லது ஏதேனும் விலை குறைவான தனிமத்தை தங்கமாக மாற்றுவது. இன்றைக்கும் இந்த ரசவாத குழியில் விழுந்து தங்கள் சம்பாத்தியம் சொத்துக்களை இழந்தோர் பல நூறு பேர்கள். எனக்கு நெருங்கிய நண்பர்கள் மூவர் இந்த ரசவாத குழியில் வீழ்ந்து பல லட்சம் ரூபாய்களை இழந்து அவமானப்பட்டு இருக்கிறார்கள் இத்தனைக்கும் இவர்கள் யோக மார்க்கத்தில் ஓரளவுக்கு முன்னேறியவர்கள். இன்னொரு வகை ரசவாத குழியையும்  சித்தர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட ரசவாத பானத்தை செய்து குடித்து விட்டால், மரணம் இல்லாமல் நோயில்லாமல் வாழலாம் என்பது. நீங்கள் ஒன்றை யோசித்துப் பாருங்கள், இறைவனோடு சேர வேண்டும் என யோகம் செய்பவனுக்கு ஏன் எப்போதும் சாகாமல் பூமியில் வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது? அப்படி அதிக காலம் பூமியில் நீங்கள் தவம் செய்ய வேண்டுமெனில் குருநாதரே அதிக காலம் உங்களை வாழ வைப்பார். இதற்கு ரசவாத பானம் தேவையில்லை.  எனக்குத் தெரிந்த ஒரு ரசவாத குரு, மதுரையைச் சேர்ந்தவர், இப்போது போதை பானத்திற்கு அடிமையாகி கிடக்கிறார். இது உங்களுக்கு தேவைதானா?



கொங்கண சித்தர் பாடல் :

"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"
                                                             

அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையை தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார்.

பார்த்திபனே புடமாறி யெடுத்துப்பார்த்தால்
     பத்தியுள்ள பித்தளைதான் செம்பாய்ப்போச்சு
போற்றியந்தச் செம்பதனைப் பதனம்பண்ணி
     புண்ணியனே வெள்ளிதனில் நாலுக்கொன்று
வாத்திமிகத் தாங்கொடு உருக்கிப்பார்க்க
     மயங்காதே மகத்தான பொன்தான்பாரே.


 மொழி ஆணவம் :-

 இன்று யோகமார்க்கத்தில் இருக்கும் பலரும், தமிழ் மொழி மட்டுமே சிறந்தது, மற்ற மொழிகள் அனைத்தும் தாழ்ந்தது, என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். உண்மையில் தமிழை விட உயர்ந்த ஒரு மொழி உள்ளது, அது உங்களுக்கு தெரியுமா? அதுதான் "மௌனம்". மௌனமே அனைத்து மொழிகளிலும் உயர்வான மொழி. இதை சித்தர்கள் பல ஞான பாடல்களிலும் "மகாரம் என்ற மௌனமே சிறப்பு" என சொல்லி இருக்கிறார்கள்.


 மாயாஜால குழிகள் :-

 சில தைல வகைகளை செய்து பயன்படுத்தி, நாம் மாயமாய் மறைந்து விடுவது, எதிரிகளை தோற்கடிப்பது, பூமிக்குள் இருக்கும் புதையல்களை கண்டுபிடிப்பது போன்றவை மாயாஜால குழிகள் எனப்படும். இதில் காலத்தை வீணடித்து யோகத்தில் முன்னேறாமல் போனவர்கள் பலர். இன்றும் இது வியாபாரமாக உள்ளது. இணையதளத்தில் அதிகமாக விளம்பரம் ஆவது. கவனமாக இருங்கள்.

 கீழே சில பாடல்கள்.

நூல்: காகபுசுண்டர் ஞானம் 80.

சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் காண்பார்?


சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்.


 யோக பயிற்சி குழிகள் :-

 யோக பயிற்சிகளை செய்யும் நுணுக்கங்களிலும் பல குழிகளை குருநாதர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். ஞான பாடல்களில் பலவற்றிலும் கும்பகப் பிராணாயாமத்தை பற்றி அனைத்து சித்தர்களும் எழுதி இருப்பார்கள். மற்றொரு பாடலில் கும்பகப் பிராணாயாமம் ஒரு முட்டாள்தனமானது, வீணானது என்றும் சொல்லியிருப்பார்கள். ஒரு யோகியானவருக்கு கும்பகப் பிராணாயாமம் வந்தால் செய்யலாம், வராவிட்டால் செய்ய தேவையில்லை. இதை விடுத்து ஆணவக் குழியில் சிக்கிக் கொண்டால் யோகம் மார்க்கத்தில் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.
இதற்கான தனிப்பதிவு கீழே உள்ளது.



 சாதாரணமாக தியானத்தை கண்களை மூடியே செய்வார்கள். சிலர் கண்களைத் திறந்தும் செய்வார்கள். இரண்டுக்குமே சித்தர்கள் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். கண்களை மூடி செய்வதற்கும் எழுதி இருக்கிறார்கள், கண்களை திறந்து செய்வதற்கும் எழுதி இருக்கிறார்கள், கண்களை மூடியும் மூடாமல் அரைக்கண்ணிலும் தியானம் செய்வதைப் பற்றி சித்தர்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் சில யோகிகள் கண்களைத் திறந்து தியானம் செய்வது தவறானது முட்டாள்தனமானது என்ற ஆணவக் குழியில் சிக்கி இருப்பார்கள். இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி தியானம் செய்யலாம்.


 முடிவுரை :-
நாம் "இறைவனோடு சேர வேண்டும்" என்பதற்கு மட்டுமே யோக மார்க்கம் பயன்படும். வேறு எதற்குமே யோக மார்க்கம் பயன்படாது.  யோகக் கலையில் மிக மிக கடினமானது, நம்மிடம் இருக்கும் மாய கர்மா ஆணவத்தை நீக்கிக் கொள்வதே.  இதில் கடுமையான விஷத்தன்மை  கொண்டது ஆணவமே. இந்த ஆணவ உணர்வானது நமது மூளையில், எதிர்மறை ரசாயனத்தை சுரக்கச் செய்து, சுழுமுனை நாடியை சுற்றிலும் ஒரு சவ்வுப் படலமாக படர வைக்கும். இதனால் நாம் உயிரை தரிசனம் காணுவது இயலாத காரியம் ஆகிவிடும். இதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


 இப்படிக்கு உங்கள் 
அகத்திய பக்தன்