வைணவ ஞானம்
ஹரி ஓம் அகத்தீசாய நமஹ.
ஸ ஏவாயம் மயா தே1த்3ய யோக3: ப்1ரோக்1த1: பு1ராத1ன: |
ப4க்தோ1ஸி மே ஸகா2 சே1தி1 ரஹஸ்யம் ஹ்யேத1து3த்1த1மம் ||3||
பொருள் :-
BG 4.3: யோகத்தைப் பற்றிய அதே மிக உயர்ந்த ரகசியமான பண்டைய அறிவை இன்று நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன், ஏனென்றால் எனது நண்பன் மற்றும் பக்தனான உன்னால் இந்த ஆழ்நிலை ஞானத்தை புரிந்துகொள்ள முடியும்.
*** ஸ்ரீமத் பகவத் கீதை. 4-3 ஞான யோகம்.
குருநாதர் அருளால் இந்த அரிதான ஞானப்பதிவு இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியிடப்படுகிறது. வைணவ மார்க்கத்தில் யோக ஞானத்தை, எப்படி புரிந்து பயிற்சி செய்வது, என்பதை குருநாதரின் கருணையினால் இப்பதிவில் நாம் பார்க்கலாம். அடியேன் நான், நம் குருநாதர் அருளியதை, இயன்றவரை மிகவும் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன். எனினும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.
வெங்கடாஜலபதி :-
வேங்கடம் + ஜலம் + அதிபதி.
* வேங்கடம் எனும் தமிழ்ச் சொல் வேம் + கடம் = வெப்பமான காடு. இது யோகியின் சிரசைக் குறிக்கும்.
* ஜலம் - சிரசில் யோகத்தால் கிடைக்கும் அமிர்தம். இதையே அப்பு என்றும், அகாரம் என்றும், கங்கை என்றும் சொல்லுவார்கள்.
அதாவது யோக-அக்கினியால் சிரசில் உருவாகும் அமிர்தத்திற்கு அதிபதியானவரே, வெங்கடாஜலபதி என்று ஞானப் பொருள்படும்.
எம்பெருமானின் கையில் இருக்கும் சக்கரம், யோகி தவம் செய்யும் ஆதார சக்கரத்தைக் குறிக்கிறது. பிரயோகத்தைப் பொருத்து இதன் கலைகள் மாறுபடும் ( பொதுவாக 16 கலைகள் ). எம்பெருமானின் மற்றொரு கையில் இருக்கும் சங்கு, யோகிக்கு மட்டும் கேட்கும் நாதத்தை குறிக்கிறது. ஆதிசேஷன், ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் இந்த மூவரும், பிராணாயாமத்தின் மூன்று நிலைகளை குறிக்கிறது. இது முறையே ரேசகம், பூரகம் மற்றும் கும்பகம் எனப்படும். யோகியின் வாகனங்கள் இதுவே.
ஆதிசேஷன் - ரேசகம் - சீறி வெளிவரும் வெப்பக் காற்று.
ஆஞ்சநேயர் - பூரகம் - உள்ளே இழுத்து, பெரிதாகும் காற்று.
கருடன் - கும்பகம் - கும்பித்து நிலைக்கும் அல்லது பறக்கும் காற்று.
யோக நரசிம்மர் :-
வைணவத் திருத்தலத்தில் யோகநரசிம்மரின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிங்கமுகத்துடன் நரசிம்மர் யோகநிலையில் மௌனமாக அமர்ந்திருப்பார். அவருக்கு பின்னே சக்கரத்தாழ்வார் நின்று இருப்பார். வைணவத்தின் மிகவும் ரகசியமான யோகஞானம் இங்குதான் உள்ளது. பல காலம் மறைக்கப்பட்ட யோக ரகசியம் இன்று எம்பெருமானின் கருணையினால் வெளிப்படுகிறது.
ஹரி ஓம் அகத்திசாய நமஹ.
கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும் நரசிம்மரின் சிங்க முகம், கேசரி முத்திரையைக் குறிக்கிறது. அவரின் அமர்ந்த நிலை, யோகம் செய்வதை குறிக்கிறது. யோகியானவர் கேசரி முத்திரையின் மூலம் யோகம் செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். அதாவது யோகியானவர் அண்ணாக்கிற்கு மேலே, புருவமத்திக்கு உள்ளே உள்ள சுழுமுனை நாடியில் கவனம் வைத்து, அதன் மூலம் தனது உயிரையும், அதற்கு மேலே பூரணத்தையும் உணர்வது. கேசரி முத்திரையைப் பற்றிய மேலும் பல அபூர்வ தகவல்களை இப்பக்கத்தின் கடைசியில் உள்ள "சாக்த ஞானம்" ( #1 ) என்ற பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
யோகியானவர் இப்படி கேசரி முத்திரையால் யோகம் செய்வதன் உச்சக்கட்ட நோக்கம் என்ன? இதற்கான பதிலை தெரிந்து கொள்ள நாம் யோகநரசிம்மருக்கு பின்பக்கம் செல்ல வேண்டும்.
யோகநரசிம்மருக்கு பின்னே இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு 16 கைகள் இருக்கும். இது 16 கலை என்ற குறியீடு. இந்தக் குறியீட்டை நம் குருநாதர், "பூரணம்" என்று அழைக்கிறார். பரப்பிரம்மம் என்றும் கூறலாம். அகத்தியர் ஞானம் 16 என்ற ஞானப் பாடலில் நமது குருநாதர் இந்த குறியீட்டை தெளிவாக சொல்லியுள்ளார். அந்தப் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
16 - பூரணம்
8 - உயிர்
4 - மனம்
இந்தக் குறியீட்டை நாம் வைணவத்தில் கீழ்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.
16 - சக்கரத்தாழ்வார் - யோகியின் இலக்கான பூரணம்.
4 - யோக நரசிம்மரின் நான்கு கைகள்- மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் ஒடுங்கி கேசரியின் மூலம் யோகம் செய்தல்.
8 - பயிற்சிக்கான எட்டெழுத்து மந்திரம் ( ஓம் நமோ நாராயணா ).
கஜேந்திர மோட்சம் :-
யோகத்தின் முக்கிய கதாபாத்திரம் சுழுமுனை நாடிதான். சித்தர்களும் ரிஷிகளும் சுழுமுனை நாடியை விநாயகரோடு அல்லது யானையின் தும்பிக்கையோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஆறு சமய வழிபாட்டிலும், விநாயகர் இல்லாமல் எந்த வழிபாடும் நடைபெறுவதில்லை. எனில், சுழுமுனை நாடியின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். கஜேந்திர மோட்சத்தில் கஜேந்திரனாக காட்டப்படும் யோகியானவர் தன் சுழுமுனை நாடியில் மனம் வைத்து, இறைவனோடு சேர வேண்டி யோகம் செய்கிறார். அப்போது ஆணவம் என்ற "முதலை" யோகியின் காலை கவ்வி கீழ்நோக்கி இழுக்கிறது. ( சித்தர்கள் மூச்சுக் காற்றை "கால்" என்று பரிபாஷையாக குறிப்பிடுவார்கள் ).
ஐயோ இந்த கொடூர அசுரனான "ஆணவ முதலை" என்னை இறைவனோடு சேரவிடாமல் தடுத்து கீழ்நோக்கி இழுக்கிறதே!! என்ற வேதனையோடு யோகி துடித்து துன்பப்படுகிறார். சிரமப்பட்டு தன் சுழுமுனை நாடியான தும்பிக்கையை தன் சகஸ்ர தளத்திற்கு மேலே யோகசூட்சுமத்தால் நீட்டி உயர்த்தி, "ஆதிமூலமே என்னை காப்பாற்று" என எம்பெருமானை வேண்டி அழைக்கிறார். பிராணயாமத்தில் கும்பகத்தைக் குறிக்கும் கருட பகவான் உடனே எம்பெருமானை சுமந்துகொண்டு யோகியைக் காப்பாற்ற வருகிறார். எம்பெருமான் தன் சக்கரத்தை சுழற்றி வீச ஆணவ முதலை அழிகிறது. சுழுமுனை நாடி, ஏன் விநாயகர் அல்லது தும்பிக்கையோடு ஒப்பிடப்படுகிறது? என்பதனை பற்றிய பல சுவராசியமான தகவல்களை கீழே தனிப் பதிவாக "கணாபத்திய ஞானம்" ( #2 ) என்ற தலைப்பில் உள்ளது. படித்து புரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக