பெரிதினும் பெரிது கேள் !
திருமணத்திற்கு முன்பு 2003-ஆம் வருடம் முதன்முறையாக திருப்பதிக்கு புனித யாத்திரையாக பழனியிலிருந்து எனது சகோதரனுடன் சென்றேன். அன்றைய நிலையில் எனது உறவுகாரர்கள் யாரும் எனக்கு பெண் கொடுக்க தயாராக இல்லை. தெரிந்த பெண்களின் மனதைக் கவரும் காதல் சாமர்த்தியமும் இல்லை.
தனியார் நிறுவனத்தில் மிகக் குறைந்த சம்பளம். தந்தை வழியோ அல்லது தாய் வழியோ எந்த சொத்தும் இல்லை. திருப்பதி எம்பெருமானிடம் வரம் கேட்க என்னிடம் எத்தனையோ பிரார்த்தனைகள் அப்போது இருந்தது. ஆனால் கருவறையை நெருங்கி எம்பெருமான் தரிசனம் கிட்டிய உடனே பெரும் ஆச்சரியம். அங்கே சிலை இல்லை, மாறாக ஜீவனாய் ஒருவர் புன்னகையுடன் நின்று என்னை பார்த்தார். கண்களின் அடக்கமுடியாத வெள்ளமாய் கண்ணீர் பெருக்கெடுத்தது. பல ஜென்மங்கள் பிரிந்த என் தாயை கண்டது போல் உணர்ந்தேன். ஏன் இவ்வளவு காலம் என்னை பிரிந்து தவிக்க விட்டாய் தேவா? என செல்லக் கோபமும் வந்தது.
அனைவரையும் ஜருகண்டி சொல்லி தள்ளி விட்டவர், ஏனோ என்னை மட்டும் எம்பெருமான் முன் நிறுத்தி விட்டார். அதிசயம். எம்பெருமானின் மீதிருந்து பாய்ந்து வந்த ஜோதி வெள்ளத்தில் நான் மூழ்கி இருந்தேன். என்ன வேண்டும் உனக்கு? என புன்னகையிலேயே எம்பெருமான் என்னிடம் கேட்டார். நான் சிறிதும் தயங்காமல் உடனே "என் தாயான எம்பெருமானே! எனக்கு நீங்களே வேண்டும், அதுவும் உடனே வேண்டும்." என உறுதியாகக் கெஞ்சிக் கேட்டேன். மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு வெகு நேரம் அழுது கொண்டிருந்தேன்.
நான் எனது வேண்டுதல்கள் அனைத்தையும் மறந்து விட்டு, ஏன் நான் எம்பெருமானையே கேட்டேன் என்பது எனக்கே புரியவில்லை. எனது முந்தைய பதிவுகள் பலவற்றிலும் இலைமறை காய் மறைவாய் சொன்னதை, இந்த பதிவில் வெளிப்படையாகவே சொல்கிறேன். அந்த வருடம் 2003இல் நான் ஒருவேளை மரணித்தால் தான் எம்பெருமானோடு சேர முடியும் என்றால் உடனே எனக்கு அந்த மரணம் வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் என் மனதில் சிறிதும் சோகம் இல்லை. மாறாக அளவு கடந்த உற்சாகம் இருந்தது. புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தேன்.
எம்பெருமானின் தரிசனத்திற்கு பிறகு, சரியாக மூன்று மாதத்தில் என் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 2004ல் திருமணத்திற்குப் பிறகு சரியாக மூன்று மாதத்தில் நல்ல சம்பளத்தில் வேறு வேலை கோவையில் கிடைத்தது. இதிலிருந்து மூன்று மாதத்தில் மனைவி கருவுற்றாள், 2005இல் எங்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வுகளை விரிவாக எனது முந்தைய பதிவான "பொன்மகள் வந்தாள்... (click link)" என்று பதிவு எழுதியுள்ளேன். விரும்புவோர் சென்று படிக்கவும்.
2008ஆம் வருடம் எனது முதல் மரண அனுபவத்தை (click link) முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். 2012ஆம் வருடம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. 2015 ஆம் வருடம் ஜெர்மனியில் குருநாதர் ஆட்கொண்டு அருளிய இரண்டாவது மரண அனுபவத்தையும் (click link) பதிவாக எழுதியுள்ளேன். 2003ஆம் வருடத்திலிருந்து 2015ஆம் வருடம் வரை 12 ஆண்டுகள் தீவிர விஷ்ணு பக்தனாக இருந்த நான், ஈசனுக்குச் சமமான குருநாதரின் பாதத்தைத் தொழும் சிவபக்தனாக மாறிவிட்டேன்.
இதை எப்படி என் மனைவியிடம் புரிய வைப்பது? நம்புவாளா? என எனக்கு சிறிது வருத்தமாக இருந்தது. எனினும் ஜெர்மனியிலிருந்து கிளம்புவதற்கு ஒரு மாதத்திற்க்கு முன், என் மனைவியிடம் மேலோட்டமாக குருநாதரை பற்றி அலைபேசியில் சொன்னேன். அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஜெர்மனி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் முன், மனைவியிடம் "நான் வந்து கொண்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அன்னவள் "நீங்கள் வீட்டிற்கு வரும் பொழுது ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது" என்றாள்.
நான் அந்த ஆச்சரியம் என்னவாக இருக்கும்? என விமான பயணத்தில் யோசித்தேன். சரிதான்! ஒரு இளம் வயது மனைவி தன் கணவனை வெகு காலம் கழித்து பார்க்கும் பொழுது அவள் ஏதேனும் காதல் பரிசு வாங்கி வைத்திருப்பாள், அதுதான் அந்த ஆச்சரியமாய் இருக்கும், என்று நினைத்தேன்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் உண்மையில் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். நான் எந்த குருநாதரை பற்றி, எப்படி என் மனைவியிடம் சொல்ல போகிறேன், என வருத்தப்பட்டேனோ, அந்த குருநாதர் சிவாம்சமாய் அமர்ந்த நிலையில், பெரிய படமாக தயாரித்து பிரேம் போட்டு வரவேற்பறையில் மாட்டி இருந்தாள். கீழே உள்ள அணையா விளக்கு என் மனைவியின் முற்பிறவி சகோதரர் அன்பளிப்பாய்க் கொடுத்தது.
சிவசிவா! இதுவே குருநாதரின் பேராற்றல்! என வியந்து போனேன். "சரி, நீ குருநாதரிடம் என்ன வேண்டினாய்?" என நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் மீண்டும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவளும் "குருபாதமே எனக்கு வேண்டும்! அவர் பாதமே தொழவேண்டும், என என்னையும் அறியாமல் வேண்டி விட்டேன்" என்றாள். இது போதாதா? இப்பிறவியிலேயே முக்தி நிச்சயக்கப்பட்ட ஆன்மா என்பதால், குருநாதர் உடனே கர்மாவை விரைந்து நீக்கும் பொத்தானை சட்டென அழுத்தி விட்டார். அதன்பிறகு அவளுக்கு இதுதான் நோயின் பெயர்! என சொல்ல முடியாத அளவிற்கு, பல விதமான நோய்கள், தலை முதல் கால் வரை தொடர்ந்து வந்த வண்ணம் வேதனையைத் தந்து கொண்டே இருந்தது. அதற்குத் தோதாக அவளுக்கு சனி திசையும் ஆரம்பித்துவிட்டது. நானும் பல மருத்துவமனைகளுக்கு அலைவதே எனக்கு அன்றாட வாழ்க்கையாக இருந்தது. இந்தப் பதிவை கூட அடியேன் நான் ஒரு மருத்துவமனையில் நரம்பு மருத்துவருக்காக காத்திருக்கும் நேரத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் என் மனைவியிடம், கர்மாவை குருநாதர் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்! கலங்காதே கண்மணியே! இதுவும் கடந்து போகும்! குருநாதரின் பாதத்தை அணு அளவும் விடாதே! என தைரியம் சொல்லி காலத்தைக் கடத்துகிறேன்.
அசைவ உணவு உண்ணும் சமூகத்தில் பிறந்து வந்ததால், மீண்டும் அந்த அசைவ உணவை உண்டால் நோய்களின் தன்மைகளைக் குறைக்கலாம், அதனால் நீ அசைவ உணவை மீண்டும் மருந்து போல் உண்டு பார், என்றேன். ஆனால் அவளுக்கு அதில் சம்மதம் இல்லை. அசைவ உணவை உண்டால் தான் குணமாகும் எனில், அப்படி ஒன்றும் இங்கே வாழ வேண்டாம்! என உறுதியாய் சொல்லி விட்டாள். கர்மாவின் வலி வேதனை ஒருபக்கம் இருந்தாலும், குருநாதர் எங்களை அனாதையாய் தவிக்க விடவில்லை. குருநாதர் தன் மைந்தரான மானாமதுரை சக்தி மடாலய தர்மதெய்வத்தின் பார்வையில் எங்களை வைத்து ஆறுதல் அளித்தார். மேலும் அவளின் முந்தைய பிறவி சகோதரரையும் காட்டி அரவணைத்தார். முக்கியமாக இந்த கலியுக எல்லையில் நான் கற்றுத் தேறவேண்டிய பாடங்களை "பாண்டிச்சேரி ஞானாலயம்" மூலம் எனக்கு அருளிச்செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும் குருநாதர் என்னை பணி நிமித்தமாக பயணிக்கச் செய்தார். இதன் மூலம் நான் முந்தைய பிறவியில் எந்தெந்த நாடுகளில் பிறந்து, எவ்வளவு செல்வத்தை அங்கே சேர்த்து வைத்திருந்தேனோ, அவை அத்தனையையும் அங்கேயே சென்று அதை மீட்டு, மீண்டும் தாய் நாட்டிற்கே கொண்டு வரும்படி செய்தார். குடும்பத்திற்கான அத்தியாவசிய கடமைகளையும் செய்ய வைத்தார். இரண்டு மகள்களையும், அவர்கள் விரும்பும்வரை எந்தத் தடையும் இல்லாமல் படித்து முடிப்பதற்கான ஒரு சிறந்த ஏற்ப்பாட்டையும் குருநாதர் (click link) செய்துவைத்தார். இரண்டு பாஸ்போர்ட் புத்தகங்கள் நிறைந்துவிட்டது. உலகின் மிகச் சிறந்த மென்பொருள் நிறுவனத்தில், ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. ஆனால் இது என் பிறவி நோக்கம் அல்ல! எனக் கருதி வேறு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்டேன். நல்வினையை எப்படி சமமான நிலையில் பார்த்தேனோ, அதே போல் தீவினையும் பார்க்கும் பக்குவத்தை குருநாதர் அருளினார். அடியேன் நான் எல்லோரையும் போல் இல்லறத்தையும் பொருளீட்டளையும் அனுபவித்து வாழ்ந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் தினந்தோறும் பணிந்து வேண்டுவது ஏதென்றால், "இறைவன் திருவடியில் விரைந்து சேர வேண்டும்" என்பது மட்டுமே. கர்மவினை தீர்ந்தால் தான் இறைவனோடு சேர முடியும் எனில் இது எல்லாம் 60 வயதுக்கு மேலே பார்த்துக் கொள்ளலாமே? நடுத்தர வயதில் எதற்கு இதைப் பற்றி யோசிக்க வேண்டும்? என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள்? 60 வயதுக்கு மேல் கர்மாவின் நோய்களை தாங்கும் உடல் வலிமையும் மனப்பக்குவமும் மிகவும் குறைவாக இருக்கும். எனவே நடுத்தர வயதிலேயே கர்மாவை கழிப்பதுவே மிகவும் சிறப்பு. ஏனெனில் கர்மாவை அனுபவிப்பவரின் வாழ்க்கைத் துணையும், நோயாளியை கவனிக்கும் பக்குவத்திலும், உடல் மற்றும் மனப் பக்குவத்தோடு இருப்பார். 60 வயதுக்கு மேல் வரும் துன்பம் மிகவும் வேதனையை கொடுக்கும், சரியான ஆதரவும் கிட்டாது.
உங்கள் வாழ்க்கை என்னும் சீட்டுக்கட்டில் அனைத்து சீட்டையும் இறைவனை வணங்கி ஏற்று விளையாடித் தான் ஆகவேண்டும். தீவினை வேண்டாம், ஆனால் நல்வினை மட்டும் பில்டர் செய்யப்பட்டு வேண்டும், என்றால் அது சாத்தியம் அல்ல. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. "இறைவனே வேண்டும்" என்ற வேண்டுதலே இரண்டையும் எளிதாய் கடக்கும் பக்குவத்தை தரும்.
எங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சக்திவாய்ந்த "எமதர்ம ராஜா மற்றும் சித்திரகுப்தர்" கோவில், கோவை வெள்ளளூர். ம்ம், நான் என்ன வேண்டுவேன், என உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அடியேன் நான் ஏதோ குருட்டாம் போக்கு அறிவுரை அல்லது தத்துவத்தை உங்களுக்கு சொல்லவில்லை. குருநாதர் அருளால் 20 ஆண்டுகள் வாழ்ந்து அனுபவித்துப் பார்த்தபின்னரே இதைச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வைக்கும் இந்த வேண்டுதல் சிறிதும் போலித்தன்மை இல்லாமல், சத்தியமான வேண்டுதலாக இருக்க வேண்டும். எப்போதும் இதையே இறைவனிடம் பிராத்திக்க வேண்டும்.
பெரிதினும் பெரிது கேள்!இறைவனிடம் இறைவனையே கேள்!
எனது முற்பிறவி குழந்தைகளே எனக்கு இப்பொழுது சொந்த பந்த உறவுகளாகவும், நண்பர்களாகவும், அடிக்கடி பழகுபவர்களாகவும் சூழ்ந்து இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு பொருளாதார பிரச்சனையில் துன்பப்படுகிறார்கள், சிலருக்கு சொந்த வீடு வேண்டும், சிலருக்கு திருமணம் நடக்க வேண்டும், சிலருக்கு நல்ல வேலை வேண்டும், சிலருக்கு குழந்தைச்செல்வம் வேண்டும், சிலருக்கு நன்கு படிக்க வேண்டும், சிலருக்கு நிம்மதியும் அமைதியும் வேண்டும், இப்படி உங்களுக்கு பலதரப்பட்ட "வேண்டும்" உள்ளது. எனது ஆழ்ந்த அனுபவத்தில் நீங்கள் இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இறைவனிடம் கேட்டால், இறைவனின் பார்வை நிச்சயம் உங்கள் மேல் விழாது. இறைவனின் பார்வை உங்கள் மேல் விழ வேண்டும் எனில் நீங்கள் "இறைவா! எனக்கு நீயே வேண்டும்! உன் பாதத்தோடு விரைந்து சேரவேண்டும்!" என்ற பிரார்த்தனை மட்டுமே இறைவனின் பார்வையை உங்கள் மேல் விழச்செய்யும். ஆனால் அது உண்மையான பிரார்த்தனையாக இருக்கவேண்டும். அப்படி எனில் உங்களை சார்ந்து வாழ்வோரின் கதி என்ன? உங்களை சார்ந்து வாழும் உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளையும் இறைவன் பாதத்தில் மானசீகமாய் ஒப்படைத்துவிட்டு, இறைவனின் வேலைக்காரனாக உங்கள் கடமையை உற்சாகமாக தினசரி செய்ய வேண்டும். துன்பமும் துயரமும் நமக்கு இல்லை. உங்கள் ஜாதக ரீதியான கர்மாவால், உங்களை அதிகம் துன்புறுத்த முடியாமல் நாளடைவில் தோற்றுப்போகும்.
பிராத்தனை வைப்பதை இன்னும் தெளிவாக கீழே உள்ள பதிவில் எழுதியுள்ளேன். உங்கள் வெற்றிக்கான அனுபவ இரகசியத்தை வெளிப்படையாய் சொல்லிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது நிதானமாகப் படித்து உணர்ந்து பயின்று பயன்பெறுங்கள்.
ஜெயம் நமதே.
இப்படிக்கு உங்கள்,
அகத்திய பக்தன்
1 கருத்து:
Hi Prem அண்ணா, எனது அனுபவத்திலும் நீங்கள் கூறியது மிகவும் சரி, குருநாதர் இது போல் அனுபவ அறிவை கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்..இன்ப துன்பத்தை சமமாக பாவிக்கும் மனப்பான்மை முக்திக்கு வழி என்று, சோதனையிலும் நாம் இறை சிந்தனை கடைபிடிக்க அவர் துணை.
கருத்துரையிடுக