சனி, 10 அக்டோபர், 2020

ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு

 ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு.


        சமீபத்தில் சகோதரர் ஸ்ரீ சக்தி சுமனன் "ராம்பரசாதி காளி மீதான கவிதைகள்" பற்றிய அருமையான facebook பதிவுகளை அடியேன் படித்தேன். மிகவும் அபூர்வமான பாடல்களை தேடி கண்டுபிடித்து அதை அற்புதமாக தமிழில் வடித்து பொருளும் எழுதியிருக்கிறார் . இவர்தம் சிரசின் அணுக்களில் குருநாதரின் அருள் மின்னலாய் பாய்ந்து பாய்ந்து ஒளிர்வதை உணரமுடிகிறது . எனக்கு வழக்கம் போல் நம் குருநாதர் எப்படி ஆதிபராசக்தியோடு ஐக்கியமாகி அவளின் அருளை பெற்றார் என சொல்லத் தோன்றியது . சக்தி சுமனின் பதிவுக்கு கருத்து எழுத முயற்சித்து இங்கே ஒரு தனி பதிவு உருவானது .



        சென்ற பகுதியில், குருநாதர் அய்யா ஆதிபராசக்தியான ஒற்றை அணுவின் அருளை எந்த அளவிற்கு பெற்றவர் என "ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலின் சில குறிப்புகளிலிருந்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பகுதியில், குருநாதர் அய்யா எப்படி ஆதிபராசக்தியின் அருளைப்பெற்றார் என்ற ஒரு குறிப்பைப் பார்ப்போம் . நம் குருநாதர் "திரேதா யுக வாசியோகம்" பயிற்சி செய்து ஆதிபராசக்தியின் அருளை பெற்றவர் . ஆனால் அய்யா, தாயின் அருளைப்பெற மிக கடுமையாக உழைத்து பல துன்பங்களை அனுபவித்து சித்தி பெற்றிருக்கிறார் . இதை அய்யாவே தனது "ஞான சைதன்யம் 51" என்ற நூலில் பாடல் 21 -லிருந்து அழகாக விவரிக்கிறார் . இந்த பாடல்கள் மூலம் நாம் பல அபூர்வ தகவல்களை அறியலாம் . அய்யா தாயாரிடம் கண்ணீர்விட்டு கெஞ்சி அழுது அமிர்தம் வாங்கி உண்கிறார் . அந்த அமிர்த போதை தலைக்கேறி அவரை மனதளவிலும் உடலளவிலும் கடுமையான பல பாதிப்புகளை காட்டுகிறது . அத்தனை துன்பங்களையும் தாங்கி, யோகத்தில் தேறி தாயோடு இணைந்து அவளின் பூரண அருளை பெற்றுவிடுகிறார் . அய்யாவின் பாடல் வரிகளை அடியேன் இயன்றவரை கீழே உங்களுக்காக தட்டச்சு செய்திருக்கிறேன் . மேலும் அந்த பாடல் ஒலித்துணுக்கையும் இணைத்திருக்கிறேன் . இதை அருமையாக இசைத்து பாடியவர் திரு. வீரமணி கண்ணன் அவர்கள் . முழுமையான பாடல் தொகுப்பு "மதுரை கீஸ்டு கானத்தில்" கிடைக்கும் .


தீபத்தில் நின்றுகொண்டேன் அநேக காலம்
சிவசிவா நினைத்ததெல்லாம் சித்தியாச்சு
கோபத்தை எள்ளளவும் மனதில் வையேன்
கூவென்று அழுத்திட்டேன் தாயைப் பார்த்து
ஆபத்து என்ன வந்தது என்று சொல்லி
ஆத்தாளும் என் முகத்தை பார்த்து நின்று
ஏமத்த அமிர்தமதை இந்தா வென்று
எனக்கும் அவள் ஈந்திட்டாள் பார்த்திட்டேனே...

பார்த்திட்டேன் மதிஅமுதம் தன்னை தின்று
பார் என்றாள் மேல்மூலம் பார்க்கும்போது
வேர்த்திட்டேன் முகமெல்லாம் களையும் ஆகி
விழுந்தேன் நான் போதைதனில் சிக்கிக் கொண்டேன்
ஆப்பிட்டேன் அவள்போதம் தன்னில் சிக்கி
அலறினேன் உளறினேன் ஆத்தாள் தன்னை
கூப்பிட்டேன் போதைதனை சகிக்க மாட்டேன்
புதுமையிது போதுமென்று அழுதிட்டேனே...

அழுதயெனைப் பார்த்த சிவகாமி ஆயி
அம்பரமாம் இடக்கலையில் இறுத்து என்றாள்
பழுதப்போ கலைமாறி போதை போச்சு 
பார்மகனே இன்னும் என்ன கவலை என்றாள்
குளிர்ந்திடவே செல்வம்போல் வந்துநின்று 
கூப்பிட்டாளே என்று திரும்பி பார்த்து
கழலற்ற பால்போலே என்னைத்தானும்    
கண்மணி என்றே சொல்லி முத்திட்டாளே 

முத்திட்டாள் முகத்தோடு முகம் அணைத்து
மோசமில்லை நீ நானும் ஒன்றே என்றாள்
பெற்றிட்டேன் அவள் நானாய் நான் அவளாய்  
பேதமில்லை இருபெரும் ஒன்றே ஆனோம் 
சத்தியமாய் குருமொழியை தவிராதானே
தாய் நானும் ஒன்றானோம் தப்பே இல்லை 
நித்தியமாய் அடிநின்று முடியில் ஏறு
நிர்ணயமாய் சொல்லிவிட்டேன் நிசமாய்த்தானே ...
   


அய்யாவின் பாடல் வரிகளை எளிதில் படிக்கமுடியும் . என்ன ? ஆதிபராசக்தி அவ்வளவு எளிதில் யாரையும் தன்னோடு இணைய விடமாட்டாள், என்று சென்ற பதிவில் படித்தது இப்போது புரிகிறதா ? கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடல் துணுக்கை கேட்டு மகிழுங்கள் .


https://youtube.com/clip/UgkxqbnsLvjoTi7ajx_e4ylVGDrob86H_jP9

https://drive.google.com/file/d/10b3NTV_VolNqfcStMXXTrJUKJSZ6hW8I/view?usp=drivesdk


கேள்வி : இந்த திரேதா யுக வாசியோகத்தை நானும் பயிற்சி செய்து சித்தியாகி ஒளியுடல் பெறலாமா ?
பதில் : முடியாது . இந்த கலியுக எல்லைக் காலத்தில் அது சாத்தியமில்லை . ஒளியுடல் பெற்ற மகாசித்தர், குருவாக உங்கள் சிரசில் இறங்கி அந்த சித்தரே உங்கள் வாசியை நடத்தவேண்டும் . இதைப்படித்த உடனே கவலைப்பட வேண்டாம், குழப்பமும் வேண்டாம் . முருகப்பெருமான் ஒளியுடலுக்கான வழிமுறைகளை "கலியுக வேத நூல்களாக" ஞானாலயத்தின் மூலம் வெளியிடுகிறார் . இந்த ஞானாலய நூல்களின் வழிமுறைகள் உயர் ஆற்றல்கள் உங்கள் சிரசில் இறங்க தடையான அணுக்களை நீக்கும் .


கேள்வி : உங்களின் பதிவுகளை மற்றவர் குழுவின் பதிவில் ஊடுருவி இடைபுகுந்து கருத்தாக புகுத்துவது நியாயமா ? நாகரிகமா ?
பதில் : நிச்சயமாக நியாயமில்லை . மேலும் அந்த குழுவின் எரிச்சலையும் சாபத்தையும் அடியேன் நான் சந்திக்க நேரிடும் . சாதாரணமாக நான் எல்லா குழுவிற்குள்ளும் ஊடுருவுவதில்லை . குருநாதரின் அருள்பெற்ற மூன்று குழுக்களில் மட்டுமே குருநாதரை வணங்கி ஊடுருவி பதிவிடுகிறேன் . அதுவும் 2024 -ஆம் வருடம் வரை மட்டுமே .


கேள்வி : அது என்ன 2024 ?
பதில் : நம் குருநாதர், முருகப்பெருமான் மற்றும் பல உயர் ஆற்றல்கள் அருளிய ஞானாலய வெளியீட்டு நூல்களில் ( ஆன்மாவின் சுயசரிதை மற்றும் முருகரின் வேத நூல்கள் ) மூலம் அடியேன் அனுமானமாய் உணர்ந்ததே இந்த 2024 வருடம் . உங்கள் ஆய்வுக்கு உட்பட்டதே . இந்த வருடத்திற்கு பிறகு பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதை உணரலாம் . யுகமாற்றத்திற்கான ஈசனின் சங்கொலி சத்தம் கேட்க ஆரம்பிக்கும் . இந்த கூடிய சுழற்சி வேகத்திற்கு ஏற்றபடி மனிதர்களின் உடல் உறுப்புகள் மற்றும் மூச்சும் ஒத்துப்போகாமல் பிணிகள் கூடும் . முக்கியமாக கெட்டியான இரத்தம் உடையவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள் . என்னடா இவன் இஷ்டத்திற்கு கதை காட்டுகிறான் என நீங்கள் நினைக்கலாம் . திடீரெனெ இப்போது உயர் ஆற்றல்கள் கீழிறங்கி கலியுக வேத நூல்களை வெளியிடும் அவசியம் என்ன? என சிந்தித்து பாருங்கள் . இந்த புத்தகங்களை காலம் தாழ்த்தாமல் வாங்கிப் படித்து, உள்ள விபரங்களை எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமாக உள்ளது என ஆராய்ந்து பாருங்கள் . நமக்கு துன்பம் வந்தால் பரவாயில்லை. ஆனால் நமக்கு பிரியமானவர்களுக்கு நம் கண்முன்னே துன்பம் வந்தால், அதை பார்க்க சகிக்காது . இனி விதி விட்ட வழி .


அடுத்த பகுதியில் நம் குருநாதரை பற்றிய மிகவும் அபூர்வமான தகவல்களை பார்ப்போம் .


ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.


( பல வேலை பளுவிற்கு நடுவே குருநாதர் எனக்கு இட்ட பணியான பதிவுகளை எழுதுகிறேன் . எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை அருள்கூர்ந்து மன்னிக்கவும் . அதில் சொல்லவந்த கருத்தையும் அதன் முக்கியத்துவத்தையும், இறைவன் அருள் பெற்ற நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் ). 



கருத்துகள் இல்லை: