நினைக்கும்போதே புண்ணியம் பெருகும் குருநாதரின் பாதம் பொற்றி.
அடியேன் போடிநாயக்கனூரில் பிறந்து மூன்று வயதில் விபரம் தெரிய ஆரம்பிக்கும்போதே, "நான் யார்? இதுவரை எங்கிருந்தேன்?" என்ற கேள்விகள் என்னை எப்போதும் சிந்தனையில் ஆழ்தியது. சிறிய குழந்தைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு ஆழ்ந்த சிந்தனை கொண்ட முகத்தில் இருக்கும் நான், எனது குடும்பத்தாருக்கு ஒரு புரியாத ஜந்துவாகவே இருந்தேன். சதா சர்வ காலமும் ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு முக்கிய சாலையைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன், சிறையில் அடைக்கப்பட்ட வேற்று கிரகவாசியாய்...

எனது குழந்தைப் பருவத்தில், எனது முதல் ஆன்மீக குருவான எனது கொள்ளு பாட்டி, விநாயகர் முருகன் சிவன் என பக்தி வழிபாட்டை சொல்லித்தந்தாள். தர்மம் செய்தால்மட்டுமே இறைவனை நெருங்கமுடியும் என்று என்னைப் பக்குவப்படுத்தினாள். கொள்ளு பாட்டி, காதில் தண்டட்டி அணிந்த ஒரு தங்க தேவதை. போடி உலவம்பஞ்சு போன்ற மென்மையான கைகளை எனது சிரசில் வைத்து, அவள் ஆன்ம மின்சாரத்தை என்னுள் பாய்ச்சி, எனக்கு முதல் ஆன்மீக தீட்சையை அளித்தாள். இதுவே அடியேன் என்னை இன்றுவரை காத்து இரட்சிக்கிறது. உலகம் அறியாத பாலகனாய் என் பாட்டியிடம் கேட்ட முதல் கேள்வி, "பாட்டி! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" பாட்டி சொன்ன பதில், "இருக்கிறார் என்றால் இருக்கிறார், இல்லை என்றால் இல்லவே இல்லை". அவ்வளவு சிறிய வயதில் இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் புரிந்து கொள்ள வெகுகாலம் ஆனது. இந்த பக்தி மார்க்கத்தில் நான் எனது பதினைந்து வயது வரை எல்லோரையும் போல் சென்றேன்.

எனது பதினைந்தாவது வயதில், வேதாத்திரி மஹரிஷியின் ( அறிவு திருக்கோவில் ) மனவளக்கலை மன்றத்தில் சேர்த்து யோகா மற்றும் தியானம் கற்றுக்கொண்டேன். கடவுளுக்கான ஒரு புதிய விளக்கம் அங்கு எனக்கு கிடைத்தது. அறிவுத் திருக்கோவிலின் யோகா, அகத்தாய்வு, புறத்தாய்வு மற்றும் காயகல்ப பயிற்சிகள் கற்று "அருட்செல்வர்" என்ற சான்றிதழ் கிடைத்தது. இந்த மகரிஷி யோக மார்க்கத்தில் பத்து ஆண்டுகள் ( எனது இருபத்தி ஐந்து வயது வரை ) இருந்தேன். ஆனாலும் எனக்குள் முழு தெளிவு இல்லை. இன்னும் ஏதோ ஒரு விஷயம் குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். மெய்ஞான தத்துவத்திற்கும் நிதர்சனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளியை கண்டேன். வேதாத்திரி மகரிஷி இந்த இடைவெளியை வேண்டுமென்றே ஆரம்ப காலத்தில் ஏற்படுத்தியதை பின் நாளில் நான் உணர்ந்தேன். இந்த மெல்லிய இடைவெளியால் தான் இந்த ஞான அமைப்பு, உலக அளவில் பெரிதும் பரவி இருக்கிறது. கசப்பான சத்தியத்தை அவர் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால், இந்த அளவிற்கு பெருவாரியான மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.

எனது இருபத்தி ஆறாவது வயதில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஒரு விபத்து ஏற்பட்டு பத்து நாட்கள் படுக்கையில் கிடந்தேன். இந்த காலத்தில் ஒரு மனமாற்றம் என்னுள் ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கு மனமகிழ்வு மிகவும் முக்கியம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் கடவுள் மஹாவிஷ்ணுதான் என்று என் மனதில் ஆழமாக தோன்றியது. எனது சகோதரனும் ஆருயிர் தோழனுமான பழனி சிவராமராஜா என்னை முதன்முதலாக திருப்பதி அழைத்துச் சென்றான். திருப்பதி பெருமாளை நெருங்கும்போது பெற்றதாயை வெகுகாலம் பிரிந்துசேர்வதுபோல் அழுகை பீறிட்டது. இரண்டுமணிநேரம் தொடர்ந்து விம்மி அழுதேன்.
நான் தீவிர விஷ்ணு பக்தனாக ஆனேன். இது என் மனதை மிகவும் மகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்தது. பல விஷ்ணு கோவில்களுக்கு சென்று வணங்கினேன். விஷ்ணுவின் நூற்றியெட்டு நாமம், ஆயிரத்தியெட்டு நாமம், ஜெப மாலை வைத்து ஓம் நமோ நாராயணா என ஜெபித்தல் என்று வாழ்க்கை சிறப்பாக சென்றது. இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தைகள், பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு, மேற்படிப்பு (MCA ) மற்றும் பல அயல்நாட்டு பயணங்கள் என அனைத்தும் சிறப்பாக சென்றது.
கடந்த 2007 ஆம் வருடம் நான் பெங்களூரில் பணி செய்துகொண்டிருந்தபோது பெற்ற விசித்திர அனுபவம் இது. நான் அப்போது தீவிர பெருமாள் பக்தனாக இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமிசம் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பெருமாள் கோவில் செல்வது வழக்கம். (குருவருளால் கடந்த 2012 முதல் முழுமையான சைவ உணவுக்கு குடும்பத்தோடு மாறிவிட்டோம்.) எம்பெருமாள் மேல்கொண்ட காதலால் நாலாயிரத்திவ்ய பிரபந்த பாடல்களில் பலவற்றை மனனம் செய்வது, பெருமாளின் ஆயிரெத்தெட்டு நாமங்களை ஜெபித்து வணங்குவதும், எம்பெருமாளின் மேல் கவிதைகள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.
மேலும் திருமணத்திற்கு ( 2003 ) முன்பிருந்தே, எனது உயிர் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி எனது ஜாதகப்படியான கடுமையான கருமவினை மற்றும் தோஷங்கள் அகல, காலபைரவர் வழிபாடும் தொடர்ந்து செய்துவருகிறேன். ஒவ்வொரு வாரமும், திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள பைரவரையும், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவரையும் நண்பர் சேதுபதியின் அறிவுரைப்படி தவறாமல் வணங்கினேன். இந்த பைரவ வழிபாடு, எனது கடும் கருமவினை மற்றும் தோஷங்களை நீக்கி நல்ல திருமண வாழ்வை தந்தது. அவ்வப்போது என் வாழ்வில் கர்மவினை காரணமாக வரும் சிக்கலான தருணங்களில் பைரவ வழிபாடு செய்வதுண்டு. நான் தூர இடங்களில் பணிபுரியும்போது எனது சிறிய மாமனார் திரு.இருளேசன் அவர்களை தொலைபேசியில் அழைத்து, பைரவர் அர்ச்சனை செய்யச்சொல்வேன். அவர் உடனே எனக்காக ராம்நாடு வழிவிடும் முருகன் கோவிலில் உள்ள பைரவருக்கு அர்ச்சனை செய்வார். நிற்க.
பல ஆண்டுகள் தொடர்ந்து கணிப்பொறியில் வேலைபார்த்த காரணமாக எனக்கு கடுமையான “கீழ் இடுப்பு வலியால்” (low back pain) துன்பப்பட்டுக்கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல ஆங்கில மருத்துவம் செய்தும் பலன் இல்லை. நரம்பில் ஊசி போடலாம், ஆனால் உத்திரவாதம் இல்லை என்றார்கள். அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தேன். எனது குடும்ப மருத்துவரும் உற்ற நண்பருமான ஓசூர் ஆங்கில மருத்துவர், என் வேதனையை கண்டு மிகவும் மனம் நொந்துபோனார். எனக்காக அவர் பல ஆங்கில மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்து, ஒரு குறிப்பிட்ட ஆங்கில ஊசிமருந்தை குறிப்பெடுத்து வைத்திருந்தார். ஒரு ஞாயிறு நாளில், நான் என் மருத்துவ நண்பரை, கடும் வலியோடு அவர் மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவர் குறிப்பெடுத்த ஊசி மருந்தைப்பற்றி சொல்லி, அதன்மூலம் வலி குணமாக அதிக வாய்ப்பு உண்டு என்றார். அந்த ஊசிமருந்து வைட்டமின் B12 வின் ஒரு குறிப்பிட்ட ( Cobalamin ) வேதிமருந்து. நான் அப்போது அதிக வலியில் இருந்ததால் என் மருத்துவ நண்பரிடம் அந்த ஊசியை உடனே எனக்கு செலுத்துமாறு வேண்டினேன். சரியென்று அருகேயிருந்த மருந்தகத்தில் அந்த ஊசியை வாங்கி, நான் நாற்காலியில் அமர்ந்த நிலையில் எனக்கு செலுத்தினார். ஊசிமருந்து செலுத்திய இருபது நொடிகளில் எனக்கு ஏதோ கரும்படலம் சூழ்ந்ததைபோல் இருந்தது. அடுத்த வினாடியே என் உயிர் என்னுடலை விட்டுப்பிரிந்து வேறு எங்கோ நின்றுகொண்டிருந்தேன். அங்கே நான் என் அருமைதெய்வம் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் முன் ஆச்சரிய ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். என்பெருமாள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத பேரொளிரூபமாக நின்றுகொண்டு, என்னை தாயின் கருணையோடு பார்த்து புன்னகை பூத்தார். எனக்கு ஒரு குடும்பம் இருக்கும் நினைவோ அல்லது பூமியில் வாழ்ந்த நினைவோ சிறிதும் இல்லை. நான் பேரார்வத்தோடு எம்பெருமாளின் ஒளிரூபத்திற்குள் சென்றுவிட எத்தனித்தேன். ஆனால், சட்டெனெ யாரோ என்னை பின்புறமாக வெக்கேனெப்பிடித்து இழுப்பதாக உணர்ந்தேன்.... நான் கண்விழித்துப் பார்த்தபோது, நண்பரின் மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் மருத்துவ நண்பர், கையில் வேறொரு ஊசியுடன் நிம்மதி பெருமூச்சோடு சிரித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தை பார்த்தவுடன் எனக்கு மிகுந்த எரிச்சலும் கோபமும் வந்தது. இன்னும் ஒரேயொரு வினாடி தாமதித்திருந்தால் நான் என் இறைவனோடு கலந்திருப்பேன். என்ன செய்ய? இன்னும் இந்த பூமியில் கணக்கு இருக்கிறது போலும். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், என் மருத்துவ நண்பரின் இஷ்டதெய்வமும் அதே பெருமாள்தான். நான் குறிப்பிட்ட cobalamin மருந்தின் ஒவ்வாமையில் மயங்கியவுடன், தன்கைவசமிருந்த ஒரேயொரு மாற்றுமருந்தை, பெருமாளை வேண்டி எனக்கு செலுத்தி உயிரை மீட்டுவிட்டார். வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில், மருத்துவ நண்பருக்கு நன்றியும் சொல்லாமல் கட்டணமும் கொடுக்காமல் வீட்டிற்கு எழுந்து சென்றுவிட்டேன். எனது அனுபவத்தில் உணர்ந்தது யாதெனில், சிறிதும் சந்தேகமில்லாத இறைநம்பிக்கையோடு வாழ்வோருக்கு "மரணம் துன்பமானதல்ல.. அதுவே உச்சகட்ட இன்பமானது".
எனினும், செத்து பிழைத்த காரணத்தால், காலபைரவருக்கு ஒரு விசேஷ அர்ச்சனை செய்ய விரும்பினேன். உடனே என் உற்ற தோழனும் சகோதரனுமான பழனி சிவராமராஜாவை தொலைபேசியில் அழைத்து, பழனிமலை கோவில் படிக்கட்டின் ஆரம்பத்தில் உள்ள பிரம்மாண்ட காலபைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டினேன். அவனும் எனக்காக அதிகாலை கடும்குளிரையும் பொருட்படுத்தாது மலையடிவாரம் சென்று பைரவருக்கு அர்ச்சனை செய்தான். கடந்த 2015 ஆம் வருடத்தில் கிடைத்த மற்றோரு மரண அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன். இறைவன் அருள் பரிபூரணமாக உங்களோடு இருக்கவேண்டி இப்போதைக்கு விடைபெறுகிறேன். (ஆம், மரணம்கூட இன்பமான போதைதான்).
இந்த விசித்திர அனுபவத்திற்கு பிறகு, இயற்கை உணவுகள் மற்றும் நமது தமிழ் சித்த வைத்திய குறிப்புகளை இணையதளத்தில் நிறைய படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது (siththarkal.com , machamuni.com ...). சித்த வைத்திய குறிப்புகளை படிக்கும் போது அகத்திய மஹாமுனிவரை பற்றி படித்தேன். தமிழுக்கு முதல் இலக்கணம் எழுதியவர், சித்த வைத்திய நூல்கள் பல எழுதியவர், வர்மக்கலை மருத்துவம் மற்றும் நோக்கு வர்மத்தை கண்டுபிடித்தவர், ஒலி அலைகள் எப்படி மனதிலும் பிரபஞ்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆராய்ந்து பல மந்திர நூல்களை எழுதியவர், இறைவனை நமக்கு உள்ளேயே எப்படி மிகச்சரியாக உணர்ந்து அனுபவிப்பது என பல நூல்கள் எழுதியவர், ரசவாத நூல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். அகத்தியரிடம் எனக்கு பக்தி ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை தமிழை நேசிக்கும் ஒருவனின் முதல் கடவுள் அகத்தியர், தமிழனின் மத வேதநூல் திருக்குறள். இந்த காலகட்டத்தில் நான் மாமிசம் உண்பதை முழுதுமாக நிறுத்தினேன். அயல்நாடு பயணத்தில் எவ்வளவு குளிரடித்தாலும் ஒரு துளியும் மது அருந்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன். மாற்றாக திரிகடுகு சூரணம் மற்றும் நிலவேம்பு எடுத்துக்கொண்டேன்.
கடந்த 2014 -2015 ஆம் வருடம் நான் ஜெர்மனில் ஒரு வருடம் குடும்பம் இல்லாமல் தனியாக சமைத்து உண்டு பணிபுரிந்தேன். இந்த ஒரு வருடம் என் வாழ்வில், அடுத்த பெரிய மாற்றத்தை கொடுத்தது. ஒருமுறை என் நண்பர் தேவராஜ் ஒரு ஜெர்மனி நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்று நீச்சல் கற்று கொடுத்தார். அப்போது அவர் என்னை முடிந்தவரை மூச்சை பிடித்துக்கொண்டு நீருக்குள் அமர்ந்து பயிற்சி எடுக்க அறிவுறுத்தினார். நான் என் வாழ்வில் முதன்முறையாக என் மூச்சை பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் ஐந்து வினாடிகூட மூச்சை பிடித்து நீருக்குள் அமர முடியவில்லை. நான் மிகவும் வருத்தத்தோடு என் அறைக்கு திரும்பிவந்து, மூச்சை பிடித்து நீச்சலடிப்பது எப்படி என்று இணையதளத்தில் தேடினேன்.
.jpeg)
அந்த தேடல் என்னை பிராணாயாமத்திற்கு கொண்டுசென்றது. முதல் தேடல் பதிவாக, எழுத்து சித்தர் பாலகுமாரனின் சிங்கப்பூர் மேடைபேச்சு பிராணாயாமம் பற்றியது வந்ததை கேட்டேன் ( இணைப்பு https://youtu.be/BOq8eWcaEl4 ) . உடனே அகத்தியரை வணங்கி என் மூச்சை 10 வினாடிகள் பிடிக்க முயற்சித்தேன். மூச்சை பிடிக்கும்போது என் மனதில் பெரிய பெரிய பேய் உருவங்கள் வந்து பயமுறுத்தியது. அகத்தியர் அருளிய ஆஞ்சநேயர் வசியக்கட்டு மந்திரம் தேவையற்ற பயத்தை போக்கியது. என் மூச்சை சிறிது சிறிதாக எண்பது வினாடிகள்வரை அடக்கிக்கொள்ள பயின்றேன். இது என்னை முழுதுமாக பக்தி மார்கத்திலிருந்து யோகமார்க்கத்துக்கு கொண்டுசென்றது. நான் ஆறு மாதத்தில் பன்னிரண்டு கிலோ எடை குறைந்தேன். தினமும் நல்ல சுறுசுறுப்பு, மைனஸிலுள்ள கடும்குளிரை எளிதாக தாங்கினேன். கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் ஒரு மாலை வேளையில் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. எனது முறையில்லாத பிராணாயாமத்தோடு, ஹடயோகத்தின் சில விபரீதமான யோகா அப்பியாசத்தையும் இணைத்து செய்தேன் (இதன் ஆபத்து கருதி மேலும் விளக்க எனக்கு அனுமதி இல்லை). ஆபத்தான ஹடயோக ஆசன பயிற்சியோடு மூச்சையடைக்கி வெளியிடும்போது, சட்டெனெ என் உயிர் எனது உடலிலிருந்து பிரிந்து ஏதோ ஒரு பிரகாசமான ஒளிக்கூட்டத்திற்குள் சென்றுவிட்டேன். என்ன நடந்தது? என என்னால் சில நிமிடங்களுக்கு யூகிக்கமுடியாமல், அந்த ஒளிகூட்டத்திற்குள் நான் கலந்து இருப்பது மிகுந்த ஆச்சர்ய ஆனந்தமாக இருந்தது. ஆனால், இந்த முறை நல்ல சுயநினைவுடன் என்னால் நன்றாக யோசிக்க முடிந்தது. திடீரெனெ எனது அறையும் அங்கிருந்த நாற்காலி மேசை கட்டில் எல்லாம் எங்கே போனது? என தேடிப்பார்த்தேன். அங்கு பரந்த ஒளியைத்தவிர எதுவுமே இல்லை. எனக்கும் எந்த உருவமும் இல்லை, ஆனால் யோசிக்க முடிகிறது. சில நிமிடங்கள் என்ன செய்வது என புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் என் உடலுக்குள் போகவேண்டும் என்று விரும்பினேன், எப்படி போவது என்று புரியாமல் கவலை கொண்டேன். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமே, இனி எனது உடலுக்குள் எப்படி செல்வது? என்று தெரியவில்லையே என யோசித்தேன். இதற்க்கு முந்தய வருடம் பக்திமார்க்கமாக அகத்திய மகாமுனி அய்யாவை வணங்கி, அவர் குருமந்திரத்தை பலமுறை பலநாட்கள் ஜெபித்து சித்திசெய்தது ஞாபகம் வந்தது. இனி அகத்தியர் தான் என்னை இங்கிருந்து காப்பாற்றவேண்டும் என்று முடிவுசெய்து, நான் ஏற்கனவே சித்திசெய்த குருமந்திரைத்தை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சிலநிமிடங்களில் யாரோ மேலிருந்து கீழ்நோக்கி அழுத்துவதுபோல் இருந்தது. சட்டெனெ நான் என் உடலுக்குள் வந்துவிட்டேன். நான் அதே அமர்ந்த நிலையில் என் அறைக்குள் இருந்தேன். அப்பாடா தப்பித்துவிட்டோம் என நிம்மதி வந்தது. நான் என் இஷ்டத்திற்கு விளையாட்டாய் செய்த தவறை தாயின் கருணையோடு மன்னித்து, என்னை புதிதாய் பெற்றெடுத்த என் குருபாதம் போற்றி போற்றி. கருணைமிகு பொதிகைமுனி பொற்பாதம் போற்றி போற்றி. இந்த நிகழ்விற்குப் பிறகு பலநாட்கள் உடல்ரீதியான சில தொந்தரவுகளும் வலியும் இருந்தது. ***எச்சரிக்கை: இதைப் படிக்கும் நீங்களும் வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சிக்க வேண்டாம். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது. இருப்பினும் என் இஷடத்துக்கு மூச்சை அடக்குவது சரியா? என தெரியாமல் சிறிது வருந்தினேன். பக்கவிளைவாக எனக்கு அடிக்கடி வயிற்றில் ஊசியால் குத்துவதுபோன்ற வலி ( குன்ம நோய் ) ஏற்பட்டது.
இந்த நோய்க்கு தீர்வு என்னவென்று குரு அகத்தியரை தியானம் செய்தேன். இரவு உறங்குமுன் திரிபலா சூரணம், காலையில் ஒரு கட்டி வெண்ணை உண்டேன். ஒரு மாதத்தில் நல்ல பலன்கிடைத்தது, வயிற்று வலி குருவருளால் குறைந்தது.
( வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ஜெர்மனி தங்குமிடம் )
எனது பிராணாயாமத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியை காண்பிக்குமாறு குரு அகத்தியரை தினமும் வேண்டினேன். குருவருளால் மதுரையில் உள்ள ஒரு பேராசிரியரின் தொடர்பு கிடைத்தது. அவர் தனது இணையதளத்தில் உள்ள "வீட்டில் வாசியோகம்" படித்து பயில சொன்னார். மேலும் அவர் வாசி பிராணாயாமத்தை மூலாதாரத்தில் மட்டும் செய்து இல்லற வாழ்வை நன்கு முழுமையாக அனுபவிக்க அறிவுறுத்தினார். இது எனக்கு மிகுந்த புத்துணர்வையும் நிம்மதியையும் தந்தது. எனது அனுபவத்தில், இறைவன் அருளைப் பெற்று வாழவும், இறுதியில் இறைவனை சேரவும், முக்தி பெறவும் கடுமையான பயிற்சிகள்தான் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் அனைவரும் நமது உலக வாழ்வை இனிதாக அனுபவித்துக் கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி எளிதாக இறைவன் அருளை பெற்று வாழ்ந்து, இறைவனோடு எளிதாக சேர வழிகள் உண்டு.
மிகவும் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்களும் கற்றுத்தர பயப்படும் சூட்சுமத்தை என்னையும் அறியாமல் என்னை ஏன் 2015 ஆம் ஆண்டில் செய்யவைத்தார் ? என பலமுறை நான் யோசித்திருக்கிறேன்.
சில நாட்களுக்குமுன் எதேட்சையாக என் ஜாதக நோட்டை எடுத்துப்பார்க்கும் போது, ஒரு விஷயம் பளிச்சிட்டது. 2015 ஆம் ஆண்டில்தான் எனக்கு ஞானகாரகனான கேதுவின் திசை ஆரம்பித்திருக்கிறது !!! கிராமங்களில் பேச்சு வழக்கில் சொல்வார்கள் "எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்" என்று. என்னை ஈன்ற பரம்பொருளை சரணடைய இத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டி உள்ளது. மேலும் கொஞ்சம் கர்மவினையும் வேண்டும். அதற்குத்தான், பெரியோர்கள் அடிக்கடி தர்மம் செய், ஆலயம் தொழு என்று கூறுகிறார்கள். இதே கேது திசையில் தான் பைத்தியம் என்ற பெயரும் கிடைக்கும். பிறகென்ன? மெத்தப்படித்த மேதாவிகள் நிறைந்த இவ்வுலகில் ஞானம், சித்தர்கள் , கடவுள் என்றால், அவன் பைத்தியம் தானே ?
மேலே உள்ள பகுதியில் அடியேன் குறிப்பிட்ட பயம், அக்னி, உடல் இளைத்தல் அனைத்தும் இந்த திசைக் காலத்திற்கு பொருந்துகிறது, ஆனால் நம் தந்தை அகத்தியர் அருளோடு அரவணைப்போடு கடக்கப்பட்டது. உங்கள் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கேதுதிசை ஏழு வருடங்கள் வரும். கேது ஞான காரகன் மோட்சகாரகன். ஒவ்வொரு கிரகத்திற்கும் நல்ல பலனும் உண்டு, சில கெட்ட பலனும் உண்டு. நல்ல இறைவழிபடும், ஒரு சித்த ஞான குருவின் அருளோடும் வாழ்க்கையை நாம் நல்ல வழியில் கடந்து செல்லலாம். சாமியாவது, சித்தராவது... அட! வாழ்க்கையை நல்ல enjoy பண்ணலாம் என்று கர்மா சூட்சுமத்தை உதாசீனம் செய்தால், படுபாதாளத்தில் விழுந்து அழ வேண்டியதுதான். உதாரணமாக, கேதுவின் காலத்தில் தீய தாக்கம் இருந்தால், கெட்ட சகவாசத்தால் அவமானம், பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
மனித ஜென்மம் எடுத்துவிட்டால் குழந்தைப் பருவம், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பெற்று வளர்ப்பது, பாசம், ஆசை, இன்னும் வாழவேண்டும் என்ற ஏக்கம், இறுதியில் மரணம். இப்படித்தான் பிறந்து பிறந்து மரணிக்கிறோம். இந்த கர்மாவின் சுழற்சியில், தான் யார், இறைவன் யார், தான் எந்த வகையில் இறைவனோடு சம்பந்தப்பட்டோம் என்பதை சிந்திக்க இறைவன் நம் அனைவருக்கும் வாய்ப்பு தரத்தான் செய்கிறார். நாம் தாம் அதை பெரும்பாலும் உதாசீனம் செய்கிறோம். (நான் தட்டச்ச்சு செய்யும் மென்பொருள் அதிக எழுத்துப் பிழை செய்கிறது. அருள்கூர்ந்து பொறுத்தருள்க.).
ஞானம் தேடுவதைப்பற்றி எழுதுவதும், படிப்பதும் நன்றாகத்தான் உள்ளது! ஆனால் நடைமுறையில் எளிதா வென்றால்... சிரமம்தான். ஒருவன் தன் பொறுப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், சதா சாராயம் குடித்துக் கொண்டே இருப்பனாகில், அவனை இந்த சமூகம் "அவன் புத்தி கெட்டு விட்டான், இனியென்ன செய்வது? அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என சகித்துக் கொண்டு அவரவர் வேலையை செய்வார்கள். அல்லது ஒருவன் அல்பாயுசு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதில் இறந்து போனால், "அவன் விதி அவ்வளவுதான்" என்று சொல்லி ஒரு பதினாறு அல்லது முப்பது நாட்கள் துக்கப்பட்டுவிட்டு "அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என்பார்கள். ஆனால், அதுவே ஒருவன் தன்னை அறியும் ஞானத்தில் ஒரு பத்து நிமிடம் மௌனமானாலும், அவனை கொதிக்கும் கல்லில் கிடத்தி கொத்து பரோட்டா போடுவார்கள். இதில் பெரிய சவால் என்னவென்றால், கருணையே வடிவான இறைவனை வணங்கிவிட்டு தன்னை வருத்தம் கொள்ளச் செய்யும் யாரையும் கோபப்படவும் கூடாது, சபிக்கவும் கூடாது. யேசுநாதரைபோல் மறு கன்னத்தையும் காட்டவேண்டியது தான். கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினால், நாம் கோவில் திறந்த நேரம் தான் செல்லமுடியும். நம் இஷ்டப்பட்ட நேரத்திற்கு சென்றால், கோவில் நடை சாற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிரஹ திசை மற்றும் கிரஹ பெயர்ச்சி காலத்திலும், இறைவன் நமக்கு காட்டும் நல்ல விஷயங்களை கவனமாக எடுத்துக்கொண்டு நமது அன்றாட வாழ்க்கையை சிறப்பொடு எடுத்துச் செல்வோமாக.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் குருவருளால் யோகமார்கத்தின் பல சித்தர்களின் நூல்கள் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மேலும் அனுபவத்தை இனி வரும் பதிவுகளில் பதிவிடுகிறேன்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.