வியாழன், 30 நவம்பர், 2017

புண்ணியத்தின் பற்றாக்குறை


  விலை மலிவானது அல்லது இலவசமானது, மிக எளிதாக எங்கும் கிடைப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?  உடனே உங்கள் மூளைக்குள் அநேக மின்சார பொறிகள் பாய்ந்து பல விடைகளை தருவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் விடை சிலவேளை தவறாக போகலாம். எனக்கு தெரிந்தவரை மிக மிக மலிவாக கிடைப்பது "அறிவுரை" தான். நீங்களும் இதை சரியென்பீர்கள் என நினைக்கிறேன். எனவேதான், நான் அறிவுரை கூறுவதை முடிந்தவரை குறைத்துவிட்டு, என் சொந்த அனுபவத்தில் நான் நேரடியாக உணர்ந்ததை மட்டும் எனக்கு மிகவும் நெருங்கியவர்க்கு மட்டும் பகிர்வது என கவனமாக உள்ளேன். அநேக மனித ஜென்மங்கள் கர்மா என்னும் விதியின் கையில் சிக்கி அதன் போக்கிலேயே வாழ்கிறார்கள். இதில் யாரையும் திருத்தவேண்டும் என்ற அவசியம், யாருக்கும் இல்லை. திருத்தநினைப்பவனே யோக்யனா? என்பது கேள்விக்குறி. மனிதக்கூட்டத்தில் நூற்றில் ஒருவனுக்கு மட்டும் சரியான வழிமுறைகள் சரியான நேரத்தில் போய்சேர்க்கிறது. அதை அவன் ஆழ்மனம் "இது சரியான வழிமுறைதான்! " என மனதார ஏற்றுக்கொண்டு அவனை நல்ல வழியில் மாற தூண்டுகிறது. எனவேதான் நான் ,  என்பதிவுகளை படிப்பவரின் பாராட்டுக்கும், லைக்குகளுக்கும் ஆசைப்பட்டு "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என ஏங்கிப்போகாமல் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

அப்பாவி ஏழைகள் கந்துவட்டியால் பாதிக்கும்போது மனம் வேதனைப்படுகிறது. அதைவிட மனதை மிகவும் பாதிக்கச்செய்வது பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை. எங்கோ எந்தப்பெண் பாதித்தாலும், என் மகளே! என மனம் வேதனைப்படுகிறது. தொடர்ச்சியான எண்ண ஓட்டங்கள் தூக்கத்தை கெடுத்து சோர்வை கொடுக்கிறது. இதற்கொரு முடிவென்ன என்று சிந்தித்து, என் குருநாதர் முன் மண்டியிட்டு, "அப்பா, இதுயென்ன கொடுமை? நான் ஏன் தொடர்ச்சியான எண்ண ஓட்டத்தில் சிக்கிக்கொள்கிறேன்? என்னால் என்ன செய்யமுடியும்? என்னிடம் உள்ள குறைபாடா? எப்படி எதிர்கொள்வது? " என பணிந்து கேட்டேன். பற்றவைத்த நெய்விளக்கின் தீபம் மேலும் சிறிது உயர்ந்து பிரகாசத்துடன், ஆழ்மனதில் இருந்து வரிகள் வர ஆரம்பித்தது. //என் மகனே! அவரவர் கர்மா வினைப்படி அவரவர் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

ஒருவனுக்கு பணம் தேவைப்படும்போது, கந்துவட்டிக்காரன் கடவுளாக தெரிவான். எப்படியாவது கேட்ட பணம் கிடைக்கவேண்டும் என பிராத்தனை செய்து சென்று கந்துவட்டி வாங்குவான். வட்டிக்காரன் பணம், சொத்து, மானம் என உருவிக்கொண்டே இருப்பான். பின்பு, கடவுளாக தெரிந்த கந்துவட்டிக்காரன் எமனாக தெரிகிறான். ஹ்ம்ம்... எமன் கூட கடவுள் தானே !!!

கந்துவட்டிக்காரனிடம் கேட்ட பணம் கிடைத்தவுடன், என் "அதிஷ்டம்" பணம் கிடைத்தது என்பான். மானத்தையும் உயிரையும் விடும்போது "பாவி" என்பான்.   என் மகனே! நீ பாவம் எது என ஆழ்ந்து சிந்திப்பதிலோ, சஞ்சலப்படுவதிலோ என்ன பலன்? நீ இது இது பாவம் என்று யாரிடம் சொன்னாலும் உனக்கு பகைதான் வரும். சிந்திப்பதற்கும் செயல்படுத்துவதற்கு மிகவும் எளிதான ஒன்று உள்ளது. அணைத்து மனிதர்களிடமும் பெருவாரியாக தென்படுவது "புண்ணியத்தின் பற்றாக்குறை"!!!.

நீயும், உன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளும், இன்று நல்ல படிப்பிலும், நல்ல தொழிலாலும் முன்னேறியிருப்பது எதனாலே ? என்றோ நீங்களும் உங்கள் முன்னோராலும் செய்யப்பட்ட புண்ணியமும் தானடா.   மனிதர்கள், தான் அதிகம் அதிகம் சேர்க்கும் பணமும் சொத்தும் தன் சந்ததிக்கு முழுமையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் அளித்துவிடும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் மறந்து விட்ட மறுத்துவிட்ட விஷயம் "புண்ணியத்தின் பற்றாக்குறை". மேற்கொண்டு உன்புத்தியால் புரிந்துகொள். காட்சிகளை கண்டு கலங்க வேண்டாம். உன்னாலான தான தர்மங்களை பிரதிபலன் பார்க்காமல் செய்து உன்வழியில் போய்க்கொண்டே இரு. நீ விரும்புவோருக்கும் "புண்ணியத்தின் பற்றாக்குறை" பற்றி சொல்லலாம்.  ஆனால், பாவத்தைப்பற்றி விரிவாக பேசினால் தேவையில்லாத வம்புதான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.// என முடித்துக்கொண்டார்.

இன்றைய காலகட்டத்தில் இதுதான் பாவச்செயல் என அறுதியிட்டு கூறுவது மிகவும் சிக்கலான காரியம். "தர்மம் செய்ய செய்ய கர்மத்தின் வினை குறையுமப்பா" என்ற குருவின் வரிகளை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. "பண வசதி உள்ளவன் தான தர்மம் நன்கு செய்யலாம், வசதியில்லாத நான் ஏன் செய்ய வேண்டும்?" என உங்களில் சிலர் யோசிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தர்மம் செய்ய பணத்தைவிட மனம் முக்கியம். 1995 இல் எனது கல்லூரி படிப்பு செலவிற்காக திண்டுக்கல்லில் பகுதி நேர வேலை செய்வேன். மாதம் ரூபாய் 800 சம்பளம். எனது செலவுபோக குறைந்தது ரூபாய் ஐம்பது மிச்சம் செய்து மணிஆர்டர் மூலம் "உதவும் கரங்கள், சிவானந்த குருகுலம்" போன்ற ஆதரவற்றோர் அசிரமங்களுக்கு அனுப்புவேன். அது அற்புதமான மனநிறைவை தரும். ஏதோ பெரும் சக்தி என்னை சூழ்ந்து அருள்வதை உணரமுடியும். இந்த சுகத்தை இன்றுவரை அனுபவிக்கிறேன். ஒரு நிமிடமேனும், 137 பெண்குழந்தைகளுக்கு தாய் தகப்பனாக என் மனைவியும் நானும் அங்கு நிற்க்கும் பாக்கியம் குரு அருளால் கிடைக்கிறது.



 உங்களுக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் விரும்பும் உங்கள் சந்ததிக்காகவேனும் "புண்ணியத்தின் பற்றாக்குறையை" ஈடு செய்து வளமோடு வாழ குருவை வணங்கி வாழ்த்துகிறேன்.



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து
(அதிகாரம்:ஈகை குறள் எண்:221)

பொழிப்பு (மு வரதராசன்): வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

இவன்,

அகத்திய பக்தன்,

பிரம்மேந்திரன் கலைச்செல்வி

வெள்ளி, 20 அக்டோபர், 2017

தனித்துவா... தயங்காதே...



                  தனித்துவா... தயங்காதே...

சதுரகிரி மலைக்கு யாத்திரை செய்ய பல நாள் வேண்டுதல். அடிக்கடி சதுரகிரி செல்லும் எனது மனைவியின் மூத்த சகோதரர் பூமிநாதன் மைத்துனரிடம், என்னை ஒருமுறை பவுர்ணமிக்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டியிருந்தேன். பவுர்ணமிக்கு முதல் நாள் அவர் தவிர்க்கமுடியாத காரணத்தால் வர இயலாது என கூறிவிட்டார். மிகுந்த வருத்தத்தோடு இருக்கையில், என் மனைவி, "பல உலகநாடுகளுக்கு பணி நிமித்தமாக தனியாக செல்லும் உங்களால் நம் நாட்டில் இருக்கும் சதுரகிரிக்கு தனியே செல்லமுடியதா ? " என்றவுடன் எனக்கு சுருக்கென்று உதித்தது. உடனே தனியே கிளம்பிவிட்டேன். கோவை டு மதுரை டு க்ரிஷ்ணன்கோவில் டு தண்டிப்பாறை காலை 5 :30 AM மணிக்கு வந்துவிட்டேன். காலைக் கடன் முடித்து சதுரகிரிமலை ஏற ஆரம்பித்தேன். போகும் வழியி நீர்விழ்ச்சியில் அருமையான குளியல். அங்கங்கே ஐந்து ஆறு சொட்டு தேன் மற்றும் ஒரு மடக்கு சதுரகிரி நீர் அருந்தி சரசரவென்று, ஓம் அகதீசாய நமஹ என்று மனதில் ஜபித்தபடி நான்கு மணி நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல், உணவு இல்லாமல், வெறும் தேனும் சிறிது நீரும் மட்டும் அருந்தி வெகு சுலமபாக குரு அருளால் கோவிலுக்கு வந்து விட்டேன்.  காலை நேரம் சுந்தர மகாலிங்க தரிசனம் மிக மிக அற்புதமாக இருந்தது. கூட்டம் இல்லாமல் சத்தம் இல்லாமல் இருந்தது. கோவிலிலேயே இருபத்தைந்து  நிமிடத்திற்கு மேலாக தரிசனம், தியானம் என அருமையாக இருந்தது. பின்பு சந்தன மகாலிங்க தரிசனமும் இருபது நிமிடம் மிகவும் மென்மையாக கிடைத்தது. 


உண்மையில் நான் பவுர்ணமி இரவு தங்கிவிட்டு மறுநாள் கிளம்பலாம் என்ற திட்டத்தில்தான் வந்தேன். ஆனால் என்மனதில் "தரிசனம் மிக பூரணமாக கிடைத்துவிட்டதே, உடனே இறங்கிவிட தூண்டியது". மலைஇறங்க மனமில்லாமல் குருநாதரை வேண்டிக் கொண்டு இறங்கலாமா? தங்கலாமா? என குழப்பத்தில் அரை மணிநேரம் பாறைகளில் உட்கார்ந்திருந்தேன். மதியம் பனிரெண்டு மணி உச்சி வெய்யில் கொளுத்தியது. என்னை ஈன்ற அகத்தீசரே! தங்கிவிடவா? என மனிதில் ஏங்கி கேட்டேன். ஆனால், ஆழ்மனதிலிருந்து "உனக்கான தரிசம் கிடைத்துவிட்டது. இறங்கு" என்றது. இறங்க மனமில்லாமல் அமர்ந்திருந்தேன்.  திடீரெனெ அற்புதமான நறுமணத்துடன் ஒரு குளிர்ந்த தென்றல் என்னை தழுவியது. அந்த கொளுத்தும் உச்சி வெயிலில் வந்தது என் தந்தை அகத்தீசர் என்று உணர்ந்து மனம் தெளிந்து மலை இறங்க ஆரம்பித்தேன். மலை முடிவிற்கு இருபது நிமிடம் முன்பாக திடீரெனெ கடும் மழை பெய்தது. மழையில் நன்கு நனைந்தேன். அனைத்து உடைகளும் ஈரமாகி கனமானது. "இறங்கு" என்று முதலில் சொல்லியபோதே இறங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எப்படியோ பேருந்தில் சிறிது காயவைத்து நல்லபடியாக நடு இரவில் கோவை வீடு வந்துசேர்ந்தேன்.
சதுரகிரி பயணத்திற்கு நன்றி தெரிவிக்க, அதே வாரம் சனிக்கிழமை குடும்பத்தோடு "வெள்ளகோவில் அகத்தியர்" கோவிலுக்கு சென்றோம். அகத்தியரின் நல்லாசிகளை பெற்றுவிட்டு கோவில் பெரியவரிடம் அளவளாவிவிட்டு மாலை ஐந்து மணிக்கு கிளம்பினோம். வரும் வழியில் காங்கேயம் அருகில் "சிவன் மலை" கோவிலுக்கு செல்ல மனதில் தூண்டியது. மழை சிறிது தூறுகிறது, இருட்ட ஆரம்பிக்கிறது, வீடு செல்ல இன்னும் இரண்டரை மணி நேரம் வாகனம் ஓட்டவேண்டும்.  ஆனாலும் ஏனோ "சிவன் மலை"  செல்ல எனக்கும் என் மனைவிக்கும் அழுத்தமாக தோன்றவே, "சிவன் மலை" எங்கள் வாகனத்திலேயே மேலே ஏற ஆரம்பிதோம். மழை நின்றது. கோவிலுக்குள் நுழையும்போதே மேளதாளம் ஒலித்தது. அது ஒரு சுப்பிரமணியர் கோவில். அன்று புரட்டாசி கடைசி சனியென்பதாலோ என்னோவோ கோவிலில் ஐந்து ஆறு பேருக்கு மேல் யாரும் இல்லை. மூலஸ்தானத்தில் மிக சௌகரியமாக நின்று பார்க்க முடிந்தது. என் கடைக்குட்டி சாய் ஹரிதா மூலஸ்தானத்திற்கு எதிரிலேயே விளையாட்டாக உட்கார்ந்து விட்டாள். யாரும் எதிர்க்கவில்லை. முருகப்பெருமானுக்கு அனைத்து அபிஷேகங்களும் முறையாக கண்குளிர நடந்தது. குருநாதர் எங்களுக்காகவே ஏற்பாடு செய்ததுபோல் ஆச்சர்யமாக இருந்தது. முருகனை வணங்கிவிட்டு, குருநாதருக்கு மனமார நன்றி கூறி வீடு வந்து விட்டோம். இரண்டு நாட்களிலேயே எனது மூத்தமகள் குருநாதரின் நட்சத்திரத்திலேயே பூப்பெய்தி விட்டாள்.
நானும் என் மனைவியும் அகத்தீசரிடம் "தந்தையே! நீங்களே இந்த குடும்பத்தின் மூத்த தலைவர். நீங்களே வைத்தீஸ்வரன். நீங்களே எங்கள் குலதெய்வம். நீங்களே அனைத்து கிரகங்களையும் இயக்குபவர். நீங்களே அவளை நல்லாசி வழங்கி அடுத்து என்ன செய்வதென அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டோம். மனதில், பிரபல இயற்கை உணவு மருத்துவர் கோவை R .S அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்க தோன்றியது. மருத்துவர்  R .S  தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, தினமும் 70 %  பழங்களும், வாழைப்பூ மற்றும் பிஞ்சு வாழைக்காய் சமைத்து தர வலியுறுத்தினார். 
மேலும் இணையத்தில் தேடிய தகவல்கள் கீழே உள்ளது. எனினும், இயற்கை உணவு மருத்துவரை ஆலோசிப்பதே சிறந்த வழி.
<<< 
இப்போதும் கிராமங்களில் பூப்பெய்தும் இளம் பெண்ணுக்கு, உளுத்தங்களியும் உளுந்து வடையும் தருவது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது. நாகரிகத்துக்கு மாறிப்போன நகரத்துப் பெண்களுக்கு அதெல்லாம் தெரியாமல் போனதன் விளைவுதான், ‘இடைப்பூப்புஎனப்படுகிற மாதவிலக்கு சுழற்சியின் இடையிடையே ஏற்படுகிற உதிரப் போக்கும், கர்ப்பப்பை பலவீனமும்... கருப்பையின் உள்வரிச் சுவர் முறையாக உருவாகாமையாலும், அது உதிர்ந்து, முறையாக வெளியேறாததோஷ நிலைதான் இதற்குக் காரணம். உளுத்த கர்ப்பப்பையை உரமாக்கி, மேற்சொன்ன பிரச்னைகளை சரியாக்க ஒரே மருந்து உளுந்து.


வாழைப்பூ வாங்கும் போது, ஒரு நிமிடம் அதை உற்றுக் கவனியுங்கள். கர்ப்பப்பையின் வடிவிலேயே இருப்பது தெரியும். வடிவில் மட்டுமின்றி, குணத்திலும் அது கர்ப்பப்பைக்கு நெருக்கமானது. வாழைப்பூவை அதன் துவர்ப்புச் சுவை மாறாமல் கூட்டாகவோ அல்லது வடையாகவோ செய்து வாரம் 2-3 முறை சாப்பிடுவது, அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் வீட்டுக்கு கீரை கொண்டு வரும் அம்மணியிடம், அடுத்த முறைஇம்பூரல்இலை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை லேசாக எண்ணெயில் வதக்கி, உளுத்தம் பருப்புமிளகு வறுத்துச் சேர்த்து, கல் உப்பு வைத்து அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து துவையலாக அரைத்துக் கொடுங்கள். மகளை மிரள வைக்கிற மாதவிலக்கு பிரச்னைகள் ஓடியே போகும்.
அடுத்தது மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற வலி. இதைசூதக வலிஎன்கிறோம். கர்ப்பப்பையும், அதைச் சுற்றியுள்ள தசை நாண்களும் வலுவிழப்பதால், உண்டாகிற தசை இறுகல் வலி இது. இதற்கு மாதுளம் பழம் மிக அருமையான மருந்து. மாதுளம் பழமும் கிட்டத்தட்ட கர்ப்பப்பை வடிவிலும், அதன் பூ நுனியானது கருவாய் வடிவிலும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? மாதுளை மணப்பாகு, மாதவிலக்கின் போதான அழற்சியைத் தவிர்த்து, வலியை நீக்கும்.
மாதம் தவறாமல் மாதவிலக்கு வந்தால்தான் ஆரோக்கியம். சிலருக்கு 3 மாதங்களுக்கொரு முறை வரும். திடீரென நின்று போகும். சூதகத் தடை என்கிற இந்தப் பிரச்னைக்குக் காரணம் ரத்தமின்மைபனைவெல்லம் சேர்த்த திராட்சைச்சாறும், பனைவெல்லப் பாகில் செய்த கருப்பு எள்ளுருண்டையும் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தும்கடைசியாக வெள்ளைப்படுதல்... கர்ப்பப்பையை தூய்மையாக வைத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். நமது உடலில் அமிலத்தன்மை, காரத்தன்மை என இரண்டு உண்டு.

இரண்டும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரித்தால், உடல் சூடும் அதிகமாகி, வெள்ளைப்பட ஆரம்பிக்கும். பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளும் சீக்கிரமே பற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க, உணவில் அடிக்கடி வெண்பூசணி, சுரைக்காய், முள்ளங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே...’ என இனி எந்தப் பிரச்னையையும் அலட்சியப்படுத்தாதீர்கள் அம்மாக்களே...

உளுத்தங்களி - என்னென்ன தேவை?
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.

எப்படிச் செய்வது?

உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும். அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். உடல் மெருகடையும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.


முள்ளங்கி துவையல் - என்னென்ன தேவை?

முள்ளங்கி - 2,
புதினா இலை - 1 கைப்பிடி,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு  புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.


வாழைப்பூ கூட்டு - என்னென்ன தேவை?

ஆய்ந்து, சுத்தம் செய்து,
நறுக்கிய வாழைப்பூ - 2 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பயத்தம் பருப்பை மலர வேக வைக்கவும். தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு அதில் வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெந்ததும் பருப்பு சேர்க்கவும். உப்பும், அரைத்த விழுதும் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.மாதவிலக்கு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் இது மருந்து.
முதலாவது பீரியட் மட்டுமல்ல ஒரு 6 பீரியட்டாவது அவர்களை விசேடமாக கவனிக்கவேணும்
நிச்சயம் பத்தியச் சாப்பாடு மூன்று கிழமைக்குத் தன்னும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பருவம் அடைந்தவுடன் வேப்பிலைக் குருத்துடன் மஞ்சளும், சர்க்கரையும் அரைத்து, காலையில் இரண்டு நெல்லிக்காய் அளவு கொடுக்க வேண்டும்.
சுத்தமான நல்லெண்ணை ஒரு மேசைக் கரண்டி காலையில் கொடுக்க வேண்டும்.
உழுந்தையும், சின்ன சீரகத்தையும் அரைத்து நல்லெண்ணை தோசை சுட்டுக் கொடுக்க வேண்டும்.
கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் போன்றவற்றை உணவில் தினமும் சேர்க்க வேண்டும்
இவைகளை ஒழுங்காக கொடுத்து வந்தால்... பிற்காலத்தில் மாதவிடாய் ஏற்படும் காலங்களில், அவர்களுக்கு வயிற்றுக் குத்து, வயிற்று நோய் போன்றவை ஏற்படாது.
உழுந்தில் செய்த களி,உழுத்தம் புட்டு,பலகாரம்,எள்ளுப் பாகு,எள்ளுப் பலகாரம்,நல்லெண்ணெயில் பொரித்த முட்டை,கத்தரிக்காய் பொரியல்,கோழியில்,மீனில் சரக்கு கறி போன்றன கொடுப்பார்கள்...பிறகு மாத விடாய் வரும் காலங்களில் இச் சத்தான சாப்பாடே பெண்ணுக்கு கை கொடுக்கும்...அதிக வலி ஏற்படாமல் தடுக்கும்.
>>> 


வீட்டில் ஒரு மாதத்திற்க்கு விளக்கு வைக்கக் கூடாது என்று சொந்த பந்த கட்டளை. அதில் ஒன்றும் எனக்கு கவலை இல்லை. ஏனெனில், கற்கால மனிதன் குகைகளில் சிக்கி முக்கி கல்லை உரசி தீ உண்டாக்கியது போல், உள்ளத்தில் சந்திரனையும் சூரியனையும் உரசி உள்ளொளி தீபம் ஏற்றி வழிபட அகத்தீசர் அவர் அன்பு மகன் எனக்கு அருளியிருக்கிறார்.



"ராஜாதி ராஜ, ராஜரிஷி திலக, 
வீராதி வீரன், சூரனை விழுங்கியவன், 
வர்மக்கலை தெய்வம், கும்பமுனி தேவன், 
வைத்தீஸ்வர நாதன், ஜோதிட ஆசான், தலையாய மஹாசித்தன், முத்தமிழ் வேந்தன், 
தமிழ் இலக்கணத்தின் தந்தை, சகலகலா வல்லவன்,
அப்பனுக்கு பாடம்சொன்ன சுப்பனின் சிறப்புமைந்தன்,
மகத்துவம் பொருந்திய அகத்திய மகாமுனி! பராக் பராக் பராக்".

மேலேயுள்ளதை படித்தவுடன் நீங்கள் சிறிது மிரள்வது எனக்கு புரிகிறது. எம் தந்தை கருணையின் முழு வடிவம். அன்பின் தென்றல். முழுமையாக சரணடைந்து வணங்கியவர்க்கே அது புரியும்.

“தன் பொருநை சூடிய சிவமே !
பாதி மதி அணிந்த பரமே !
பஞ்சநாக லிங்க ரூபமே !
சித்த ராஜ பேரொளியே!
மகத்துவமான அகத்தியமே !
உன்பொற்பாதம் போற்றி போற்றி. “
--அடியவன் இவன் பிச்சைக்கார நாய்.

பொருள்:- தன் பொருநை என்ற தாமிரபரணி நதியை தன் தலையில் சூடிய ஈசன், இடகலையை குறைத்து யோகம்செய்து பரம்பொருளானவர், பஞ்ச இந்திரியங்களை அன்பால் அடக்கி தனக்கு குடையாக ஆக்கிய லிங்க ரூபம், சித்தர்களில் தலையாய சித்தர், அகத்திய மகாமுனி பொற்பாதம் சரணம் செய்வோம்.

ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.